த.லிங்கரெட்ணம்; (இயற்பெயர்: தம்பிஐயா லிங்கரெட்ணம்). மட்டக்களப்பு: வேம்பு சிந்தனைக்கூடம், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
xviii, 254 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-97620-3-9.
திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்நூலாசிரியர் சென். பிரான்சிஸ் சவேரியார் வித்தியாலயம் மற்றும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். நம் முன்னோர் பழந்தமிழ் இலக்கியங்களை வாழ்வியல் அடிப்படையில் அகம்-புறம் என வகுத்துள்ளனர். அதை அடியொற்றி இத்தொகுப்பில் கவிஞர் தனது ஆக்கங்களையும் இங்கு அகம்-புறம் என்று வகுத்துப் பாடியுள்ளார். ‘அகம்” உள்ளத்தோடு தொடர்புடைய உணர்ச்சிகளை உள்ளடக்கியது. ‘புறம்” வீரம், தியாகம், போராட்டங்கள் எனப் பல்பரிமாணம் கொண்டது. திருக்கோணேசர் மீது தீராத பக்தி கொண்ட நூலாசிரியர் கோணேசரையும், ஸ்ரீ பத்ரகாளி அம்மனையும் நினைந்துருகியும் பாடியுள்ளார். மானிடத்தை, அதன் இயல்புகளை, இயற்கையை, இனிய காதலை, இளமையின் துடிப்புகளை, மாத்திரமின்றி, தன் இளமைக்கால சிவன் கோயிலடி விளையாட்டு நண்பர்களை, தனக்கும் தன் இனத்துக்கும் நேர்ந்த இழப்புகளை, துரோகங்களை என பல்வேறு நினைவுகளையும் அனுபவங்களையும் தனது கவிதைகளில் இங்கு காட்சிப்படுத்தியுள்ளார்.