16461 அந்த இசையை மட்டும் நிறுத்தாதே.

க.வாசுதேவன். பிரான்ஸ்: செய்ன் நதி வெளியீடு, Edition La Seine, 7, rue cail, 75010 Paris, 1வது பதிப்பு, ஜனவரி 2013 (அச்சக விபரம் தரப்படவில்லை).

72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×11.5 சமீ.

‘அனுபவத்தின் அக மர்மங்களை சாயம் பூசாத வார்த்தைகளால் கிளறி, வாசகர் முன்னர் கொண்டிருந்த விதிகளைச் சுக்குநூறாக்கி புதிய விதிகளுக்கான வெளிகளைத் திறக்க, புலன்களின் தீவிரம் தணிந்து அறிவின் அகக் கண்கள் அகலவிரிய துணைநிற்கின்றன வாசுதேவனின் கவிதைகள். சர்வதேச இலக்கியங்களுடனான பரிச்சயம், பிரெஞ்சு மொழியின் ஆளுமை, காத்திரமான படிமங்கள், பலதரப்பட்ட மக்களுடனான அனுபவங்கள், வரலாறுகள் பற்றிய ஆழ்ந்த புலமை என்பவை கவிஞர் வாசுதேவனின் கவிதைகளை தமிழ்க் கவிதைகளின் தளத்திலிருந்து இன்னுமொரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. வாழ்வின் மையங்களை உடைத்தெறிந்து அல்லது அவற்றிலிருந்து விலகி நின்று, எந்தக் கட்டமைப்புகளுக்குள்ளும் சிக்கிவிடாத சூறாவளியாய் சுற்றிச் சுழன்றடிக்கும் வாழ்வியக்கத்தை கவிஞர் காலத்தின் மைகொண்டு கவிதைகளாய் தீட்டியுள்ளார்” (முன்னுரையில் ஏ.ஜோய்). வாசுதேவன் இலங்கையின் வட பகுதியில் வேலணைக் கிராமத்தில் 1962இல் பிறந்தவர். 1984இலிருந்து பிரான்சில் வசித்துவரும் இவர் அங்கு கணனித்துறையில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார். தற்போது நிதித்துறையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றுகின்றார். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

ஏனைய பதிவுகள்