கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி).
114 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ.
பெண்கள் கருவுற்ற காலத்தில் இரண்டாவது வாரத்தில் பனிக்குடம் என்னும் பகுதி திரவத்தால் நிறைந்து கருப்பையில் உருவாகிறது. கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து அதன் பாதுகாப்பில் வளர்கின்றது. உடல் பிரசவத்திற்கு தயாரானதும் இந்தப் பனிக்குடம் உடையத் தொடங்கி திரவம் மற்ற மாசுக்களுடன் வெளியே வந்துவிடும். இந்தக் கவிதைத் தொகுதியிலும் அவ்வாறே சுகமாய்ச் சுமந்து வலியோடு வளர்த்து உயிராய் உரமாய் கனவாய் வெளியுலகில் நடமாட விட்ட உயிர்களில் அன்னையரின் மனஓசை ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தும் வகையில் இந்நூலின் கவித்துளிகள் அமைந்துள்ளன. அணிந்துரை வழங்கியுள்ள தேவகோட்டை முத்துமணி “இந்த நூலில் சுருங்கச் சொல்லி நம்முள்ளே ஒரு பொறியைப் பற்றவைத்துவிட்டு அறிவு விளக்கை வாசிப்பவரின் சிந்தையைத் தூண்டும் வண்ணம் செய்திருக்கிறார். ஒவ்வொரு வரியும் மிக யதார்த்தமாகவும் எளிய நடையுடனும் இருந்தாலும் அரிய எண்ணங்களை இக்கவி வரிகள் நம்முள்ளே விதைத்துச் செல்கின்றன” என்கிறார். தாய்மை, பெண்மை, முதுமை, அம்மா கவிதைகள் என நான்கு பிரிவுகளில் இக்கவிதைகள் விரிந்து கிடக்கின்றன. கௌரி, கௌசி ஆகிய புனைபெயர்களில் தாயகத்திலும், புகலிடத்திலும் இலக்கியத்துறையில் தடம்பதித்தவர் திருமதி சந்திரகௌரி சிவபாலன். மட்டக்களப்பு மாவட்டம்- ஏறாவூரில் பிறந்த இவர், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றதுடன், நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்று தன் தொழில்துறையாக ஆசிரியத் துறையை தேர்ந்தெடுத்தவர். மட்டக்களப்பு கறுவாக்கேணி தமிழ் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்ற இவர், பின்னர் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகவும், நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர்.