செ.குணரத்தினம். மட்டக்களப்பு: செ.குணரத்தினம், அமிர்தகழி, 1வது பதிப்பு, 2020. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).
vi, 44 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×16 சமீ., ISBN: 978-955-43203-4-5.
கிழக்கின் முக்கியமான படைப்பாளியான கவிஞர் செ.குணரத்தினம் அவர்களின் சிறுகதைப் படைப்பாக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பில் மனிதாபிமானம் (ஞானம் பரிசுக்கதை), அது ஒரு கனாக்காலம் (வீரகேசரி), காணாமல் போனவன் (தினக்குரல் பரிசுக்கதை), நீரடித்து நீர் விலகாது (தினகரன்), தலைமுறைகளைத் தேடி (வீரகேசரி பரிசுக்கதை), வழி பிறந்தது (வீரகேசரி பரிசுக்கதை), கழித்த கல் (தினகரன்) ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகும். விடிவுகள் அடிவானில், பூபாலி ஆகிய கதைத் தொகுதிகளையடுத்து இத்தொகுப்பு வெளிவருகின்றது. மட்டக்களப்பு பிரதேச கிராம மக்களது வெவ்வேறு காலகட்ட வாழ்வியலைப் பதிவுசெய்துள்ள சிறுகதைகள் இவை. ”அது ஒரு கனாக்காலம்” பால்யகாலத்து நினைவுகளை அசைபோட்டுப் பெருமூச்செறிய வைக்கின்றது. ”நீரடித்து நீர் விலகாது” ஒரு குடும்பத்திலேற்படும் பிரச்சினைகள் பற்றிய வித்தியாசமானதொரு பார்வையைத் தருகின்றது. ”கழித்த கல்” பெற்றோரின் முதுமைக்காலம் பற்றியதாகும். ”வழி பிறந்தது” மீனவக் குடும்பமொன்றின் வறுமையை மாத்திரம் காட்டாமல் வறுமையிலிருந்து மீண்டெழும் வழியைச் சொல்வதாக அமைகின்றது. ”தலைமுறைகளைத் தேடி” மட்டக்களப்பில் வாழும் யாழ்ப்பாணப் பூர்வீகம் கொண்ட குடும்பத்தின் இளைய தலைமுறையொன்று தன் பூர்வீகம் தேடி யாழ்ப்பாணம் செல்வதாகச் சித்திரிக்கின்றது. ”மனிதாபிமானம்” இன்று நீறுபூத்த நெருப்பாகக் கனற்றிருக்கும் மதமாற்றம் பற்றிப் பேசுகின்றது.