தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர்).
320 பக்கம், விலை: இந்திய ரூபா 360., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91994-31-0.
ஒரு பல்கலைக்கழக மாணவத் தலைவனின் கல்வியின் தேடலும் காதலும் வீரமும்தான் பயங்கரவாதி நாவலின் கதை. மிகக் கொடிய இனவழிப்பில் சிக்கிச்சிதையும் ஒரு குடும்பத்திலிருந்து மீள்கின்ற ஒரு குழந்தை வாழ்வுக்காக மேற்கொள்ளும் போராட்டமாகவும் வேட்கையாகவும் இந்நாவல் உருவாகியுள்ளது. 2005இல் தொடங்கும் கதை 2009 ஈழ இறுதிப் போர் காலத்துடன் முடிவுறுகின்றது. “மௌனிகளாய் இருப்போருக்காக மாத்திரமின்றி எங்கள் கதைகளை திரிப்போருக்கு எதிராயும் என் புனைவின் குரலைத் தருகிற இப் பயணம் துப்பாக்கியின் குழல்மீதுதான் நிகழ்கிறது. எதிரில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் கண்காணிக்கும் தருணங்களில்தான் கிளிநொச்சி நகரப் பூங்காவிலிருந்து “பயங்கரவாதி” கதையின் முதல் பக்கங்களை எழுதத் துவங்கினேன். அதே நகரத்தில் அமர்ந்தபடியே இறுதிப் பக்கங்கள்வரை தினமும் எழுதி முடித்தேன். வாழ்வையும் எழுத்தையும் போராட்டமாக்க வேண்டும் என்பதை காலம் கற்றுத் தந்திருக்கிறது. கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் தேடப்படும் காலத்தில் எழுத்தை ஒரு சுவாசமாக மாத்திரமின்றி ஆயுதமாகவும் பற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் கைகளில் தரப்பட்டிருக்கிறது” என்று இந்நாவல் பற்றிக் கூறும் தீபச்செல்வன் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழில் இளங்கலைச் சிறப்புப் பட்டமும், தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (M.A) பெற்றவர்.