இ.இராஜேஸ்கண்ணன். யாழ்ப்பாணம்: இ.இராஜேஸ்கண்ணன், சாத்வீக பிரஸ்தம் இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, மார்ச் 2021. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).
24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.
தனது பத்தாவது அகவையில் மறைந்த இராஜேஸ்கண்ணன் வாமனன் (22.11.2010-17.2.2021) அவர்களின் மறைவின் நினைவு மலர். யாழ்ப்பாணம் வதிரியில் 22-01-1973இல் பிறந்த இராஜேஸ்கண்ணன் தற்போது இமையாணன் கிழக்கில் வசித்து வருகிறார். தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பெற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி ஆவார். பின்னர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கரவெட்டி பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிய இராஜேஸ்கண்ணன் 2001 முதல் மூன்று வருடங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை விரிவுரையாளராகவும் பின்னர் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளாக யா/வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்பித்தார். தற்போது நிரந்தரமாக யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகின்றார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான முதுசொமாக 2002ல் வெளியாகியது. ”போர்வைக்குள் வாழ்வு” என்ற கவிதைத் தொகுதியினை 2008ல் வெளியிட்டுள்ளார். இந்நினைவு மலரில் இராஜேஸ்கண்ணன் தன் மகனின் இழப்பின் வலியை உணர்வுபூர்வமானதொரு நினைவுப்பதிகை இலக்கியமாகப் பதிவு செய்திருக்கிறார்.