க.குமரன் (தொகுப்பும் பதிப்பும்).கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு : குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 278 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955-659-449-2.
ஈழத்துத் தமிழ் மக்களின் நூல் பண்பாட்டை வளம்படுத்துவதில் ஒரு நிறுவனத்திற்கீடாக செயற்பட்டு வருபவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. தனது நூல்தேட்டம் தொகுதிகளினூடாக ஈழத்து நூல்களை இவர் பட்டியலிட்டதன் மூலம் அவற்றைப்பற்றிய விபரங்களை இன்றும் எம்மால் உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகின்றது. தமிழகம் உட்பட மொத்த தமிழ்ச் சூழலிலேயே இவரைப்போன்ற நூல்நலன் சார்ந்த செயற்பாட்டாளர் வேரொருவரும் இல்லை எனலாம். நூல் உலகின் அனைத்து மட்டங்களிலும் முழு வீச்சுடன் இயங்கி வருபவர். பயிற்றப்பட்ட, புதிய சிந்தனைகளைக்கொண்ட, அப்புதிய சிந்தனைகளை நூலகச் சூழலில் அமுல்படுத்திய நூலகர் என்ற வட்டத்திற்கும் அப்பால் எழுத்தாளனாக, வெளியீட்டாளனாக, நூல்களை வெளியிட உதவும் இணைப்பாளனாக, நூல் தொகுப்பாளனாக, வாசகனாக, விமர்சகனாக, ஆவணக் காப்பாளனாக என நூல் உலகின் அனைத்து மட்டங்களிலும் தீவிரமாக இயங்கும் நூல்நேசர் இவர். இத்தகைய அற்புதமான நூல் உலகு சார்ந்த செயற்பாட்டாளனின் சேவையினை நயக்கும் மலர் இது. இம்மலர் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாம் பகுதி நூலகவியலாளர் என். செல்வராஜா பற்றிய அறிமுகத்தையும், இரண்டாம் பகுதி அவரின் பணிகள்பற்றிய பலரது கட்டுரைகளையும், மூன்றாம் பகுதி அவரின் எழுத்துக்கள் பற்றிய கட்டுரைகளையும் நான்காம் பகுதி அவருடனான நேர்காணல்களையும், ஐந்தாம் பகுதி அவருடைய எழுத்துக்கள் மற்றும் அவர் பற்றிய கட்டுரைகள், செய்திகள், நேர்காணல்கள் ஆகியவை பற்றிய விபரங்களையும் இம்மலர் கொண்டுள்ளது.