16206 அரபு வசந்தம்.

சி.பிரசாத். கொழும்பு 11 : சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

xii, 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-031-4.

‘அரபு வசந்தம்” என்னும் அரபுப் புரட்சி பற்றிய மக்கள் திரள் அரசியலை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்நூல் வெளிவந்துள்ளது. சர்வதேச அரசியல் விவகாரங்களில் மாணவர்கள் அதிகம் நாட்டம் கொள்ளத் தூண்டும் வகையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அரபு வசந்தம் பற்றிய ஓர் அறிமுகம் முதலாவது இயலில் தரப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புரட்சி இடம்பெற்ற அரபு நாடுகள் பற்றி தனித்தனி இயல்களிலும் விளக்கப்பட்டுள்ளது. துனீசியா, எகிப்து, லிபியா, சிரியா, பஹ்ரைன், ஏமன், மொராக்கோ, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், ஓமான், சவுதி அரேபியா, ஈராக், சோமாலியா ஆகிய நாடுகளில் அரபு வசந்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டதென்பதை விளக்கியிருக்கிறார். தொடர்ந்து புரட்சியின் தாக்கத்துக்கு உள்ளாகிய பிற நாடுகளாக சீனா, அமெரிக்கா, மாலைதீவு ஆகிய நாடுகளின் நிலை பற்றி விளக்கமளிக்கின்றார். தொடர்ந்து புரட்சியின் பின்புலம் பற்றி விளக்குகையில் நேரடியான காரணிகளையும் மறைமுகக் காரணிகளையும் தெளிவுபடுத்துகின்றார். புரட்சியின் விளைவு பற்றிய இயலில் அரசியல் விளைவு, சமூக விளைவு, பொருளாதார விளைவு, சமய நிலை, ஏகாதிபத்திய நலன், ஜனநாயக விழுமியங்கள் என்பவற்றினையும் விளக்குகின்றார். இந்த வகையில், இந்நூல் அரபு வசந்தம் மற்றும் அதன் எழுச்சிக்கு காரணமான அரபு மக்களின் பிரச்சினைகள் என்பவற்றை தெளிவுபடுத்துவதோடு, புரட்சி ஏற்பட்ட நாடுகளில் அரசியல், சமூக பொருளாதார ரீதியாக ஏற்பட்ட விளைவுகளையும் மதிப்பீடு செய்கின்றது. இம்மதிப்பீடு புரட்சியின் விளைவுகள் குறித்த ஒரு பொதுவான கற்கைக்கு எம்மை இட்டுச் செல்கின்றது. சிறீரங்கன் பிரசாத் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றவர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் உதவி விரிவுரையாளராகவும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின்; வவுனியா வளாகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70224).

ஏனைய பதிவுகள்