திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 150 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ.
இந்துமதம் என்ன சொல்கிறது? என்னும் தொடரில் ஆசிரியரின் 3ஆவது நூல். முதலாவது தொகுதியில் இந்து மதத்தின் அறிமுகம், கோவில் வழிபாட்டு முறைகள், மக்கள் ஆற்றவேண்டிய கடமைகள், ஆன்மார்த்த கிரியைகள், அவற்றின் பயன்கள், தல விசேஷங்கள் என்பன விளக்கப்பட்டிருந்தது. இரண்டாவது தொகுதியில் தர்மங்கள், கிரியைகள், சடங்குகள் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட மங்கலப் பொருள்களின் மகத்துவம் பற்றி விளக்கப்பட்டிருந்தது. மனித வாழ்க்கை அர்த்தமுடையதாக விளங்குவதற்கு சமய தத்தவங்களைப் புரிந்துகொள்ளல் அவசியமென்ற அடிப்படையில், இவ்வாழ்வில் பாவம் செய்வது தவிர்க்கப்படல் வேண்டும் என்றும், அதற்கான காரணத்தைக் கர்மதத்துவம், விதி, மறுபிறப்பு என்னும் கோட்பாடுகளால் எவ்வாறு விளங்கிக்கொள்ளலாம் என்றும் விளக்குகின்றது. இந்த தத்துவ விசாரத்தை இந்நூலின் பன்னிரு இயல்களிலும் காண முடிகின்றது. இந்து சமயத்தின் அடிப்படை, மனிதனின் பிறப்பு, முக்குணங்களின் இயல்புகள், மனம் என்னும் கருவி, எண்ணத்தின் வலிமை, அறிவே உயர்வானது, பகுத்தறிவு என்றால் என்ன, வாழ்வு, பாவம் என்ற பதம் குறிப்பது யாது?, கர்ம தத்துவம், விதி(ஊழ்), மறுபிறப்புக் கோட்பாட்டின் வலிமை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஞானம் பதிப்பக வெளியீட்டுத் தொடரில் 32ஆவதாக வெளிவந்துள்ள நூல் இதுவாகும்.