9163 திருவாதவூரரும் சைவத் திருநெறியும்: ஆய்வரங்கச் சிறப்புமலர் 2014.

சாந்தி நாவுக்கரசன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

viii, 182 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 25×19 சமீ.

மேற்படி திணைக்களத்தினால்  18.7.2014 முதல் 20.7.2014 வரை கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட ஆய்வரங்கத்தில் விநியோகிக்கப்பட்ட மலர்.  மாணிக்கவாசகரது அருட்பனுவல்களான திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களும் அவற்றில் காணப்படும் பக்தி சுவை, இலக்கியச் சுவை, சைவசித்தாந்த, தத்துவக் கருத்துக்கள், மாணிக்கவாசகர்கால சைவநெறி என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு கட்டுரைகள் இவ்வாய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வாய்வரங்கின் முன்னோடியாக வெளியிடப்பட்டுள்ள இம்மலர், பல்வேறு நூல்கள், மலர்களில் இருந்து தேர்ந்த 10 ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியதாக அன்றைய தினங்களில் விநியோகிக்கப்பட்டது.  இதில் க.கணபதிப்பிள்ளை  அவர்களின் மணிவாசகர் வரலாறு  என்ற கட்டுரை முதலாவதாக அமைகின்றது. தொடர்ந்து பேராசிரியர் கா.வெள்ளைவாரணன் எழுதிய மாணிக்கவாசகர் காலம் என்ற கட்டுரையும், முரு.பழ.இரத்தினம் செட்டியார் எழுதிய திருவாசகத்தில் சைவசித்தாந்தம், திருவாசகத்தில் இலக்கியச்சுவை, திருவாசகத்தில் பக்திச் சுவை ஆகிய 3 கட்டுரைகளும், பேராசிரியர் ஞானா குலேந்திரனின் திருவாசக இசை, இசைமணி கா.சங்கரனார் எழுதிய திருவாசக நிருத்திய நாட்டியம் ஆகிய கட்டுரைகளும், முனைவர் இரா.சுந்தரமூர்த்தி எழுதிய திருவாசக மூலப் பதிப்புகள், திருவாசக உரை வரலாறு ஆகிய இரு கட்டுரைகளும்;, பேராசிரியர் ஆ.சிவலிங்கனார் எழுதிய திருக்கோவையார் என்ற கட்டுரையும் ஆக மொத்தம் பத்து கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்