14933 பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரும் முத்தமிழும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-79-4. மட்டக்களப்பு காரைதீவில் 27.03.1892 அன்று சாமித்தம்பி-கண்ணம்மையார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் சுவாமி விபுலாநந்தர். முதலில் தம்பிப்பிள்ளை என்ற பெயர்சூட்டிய பெற்றோர், பின்னர் இவருக்கு கதிர்காம முருகனின் பெயரால் மயில்வாகனன் என்று வழங்கினர். பின்னர் துறவறத்தை நாடியவேளை சுவாமி விபுலாநந்தர் என்ற பெயர் பெற்றார். இசைத் தமிழுக்கு தனது “யாழ் நூல்” என்ற இணையற்ற படைப்பை அளித்து சேவை செய்த சுவாமி விபுலானந்தர் ஈழம் தந்த அரிய தமிழ் மணிகளில் ஒருவர். யாழ் நூல் தவிர மதங்க சூளாமணி, நடராஜ வடிவம் போன்ற அரிய நூல்களையும் எழுதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலவர் வரிசையில் தன் சுவடுகளைப் பதித்தவர். இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த உன்னதமான துறவிகளில் ஒருவர். ஆன்மீகத்தையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமகன். கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் வென்ற அவர், பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று அங்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் கல்வியும் கற்று அதில் பட்டயப்படிப்பு ஒன்றையும் முடித்தார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் படிப்பான இளம் அறிவியல் பட்டப் படிப்பிலும் வென்றார். 28-வது வயதிலேயே கல்லூரி ஒன்றின் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது. கொழும்புக்கு அவர் படிக்க வந்த காலகட்டத்திலேயே கைலாசபிள்ளை, கந்தையாபிள்ளை உள்ளிட்ட சில முக்கிய தமிழ் அறிஞர்களிடம் நேரடியாகத் தமிழ் கற்றார். அதனால் அவர் ஆழமான தமிழறிவைப் பெற்றார். மதுரையின் புகழ் பெற்ற தமிழ்ச் சங்கத்தின் வித்துவான் தேர்விலும் வென்றார். தமிழோடு ஆன்மீகமும் அவரை ஆட்கொண்டகாலம் இதுதான். அதற்கு மூல காரணம் கொழும்பிலிருந்த இராமகிருஷ்ண மடமும் இவரிடம் இயல்பாகவே இருந்த பாமரர்க்குத் தொண்டு செய்யும் மனப்பான்மையும்தான். 1922-ம் ஆண்டு அவர் சென்னைக்கு வந்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். மடத்தின் தமிழ் பத்திரிகையான ராமகிருஷ்ண விஜயம் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையான வேதாந்தகேசரி ஆகியவற்றின் ஆசிரியரானார். 1924-ம் ஆண்டு இவரது வாழ்வில் முக்கியத் திருப்பம் நேர்ந்தது. மயில்வாகனனாக இருந்த இவருக்கு சிவானந்த சுவாமிகள் என்ற துறவி, காவி உடை அளித்து சுவாமி விபுலானந்தராக்கி இராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவராக்கினார். 1925-ம் ஆண்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய விபுலானந்தர் தன் தொண்டு வாழ்வைத் தொடர்ந்தார். 1931-ல் மீண்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் அன்று புகழ் பெற்றுவிளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் தொடரில் முதலாவது நூலாக வெளிவந்துள்ள இப்பிரசுரம், ஜீவநதி வெளியீட்டகத்தின் 104ஆவது பிரசுரமுமாகும்.

ஏனைய பதிவுகள்