ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜீன் 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 63 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6165-01-7.
இந்நூலிலுள்ள ஒவ்வொரு கதையும் மூன்று பிரிவுகளாக அமைகின்றது. முதலில் நாம் சிறுவயதில் பெற்றோர் வழியாகக் கேட்டும், அறிந்தும் மனதின் ஒரு மூலையில் ஒழுக்கவியலாகப் பொத்திப் பாதுகாத்துவைத்துள்ள 14 சிறுவர் கதைகளை படிமுறையாக ஒழுங்குபடுத்தித் தந்துள்ளார் ஸ்ரீரஞ்சனி. அத்துடன் பாரதியார் பாடல், குருவிக்கூடு, குரங்கும் முதலையும் ஆகிய மூன்று பாடல்களையும், பேச்சுமொழி உரைநடையிலமைந்த சிறு நாடகம் ஒன்றையும் ‘ஒரு பயணம்” என்ற தலைப்பில் உள்ளடக்கியதாக மொத்தம் 18 ஆக்கங்கள்; இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆக்கத்துக்கும் பொருத்தமாக தமிழக ஓவியர் ஜீவாவின் சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பிரிவு இந்நூலின் முக்கியமானது. ஒவ்வொரு படைப்பாக்கத்தையும் வெறுமனே வாசித்துக் கடந்துவிட முடியாதவாறு அக்கதையில் அல்லது பாடலில் உள்ள கருத்தையிட்டு வாசகரை மேலும் சிந்திக்கும் வழியொன்றை ஒவ்வொரு கதையினதும் இறுதியில் கேள்விக்கணைகளாகத் தொடுத்துத் தந்துள்ளார். கதையின் முடிவை எவ்வாறு மாற்றி அமைக்கலாம்? கதையில் உள்ள சில சொற்களுக்கு எத்தகைய பிரதியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தலாம்? கதையின் விளக்கத்தை வேறு எவ்வகையில் வெளிப்படுத்தலாம்? என்றவாறாக கேள்விகளையும் வழங்கி இளம் வாசகர்களை மாற்றி யோசிக்கவும் வைக்கிறார். நரியும் திராட்சைப் பழங்களும், ஒற்றுமையே பலம், குரங்கும் அப்பமும், நரியும் கொக்கும், பொன் முட்டை, நாயும் எலும்புத் துண்டும், ஏமாற்றாதே ஏமாறாதே, புத்திசாலிக் காகம், ஓநாயும் சிறுவனும், புறாவும் எறும்பும், ஆமையும் முயலும், கீரியும் பாம்பும், இரு நண்பர்கள், காகமும் முத்துமாலையும், ஒரு பயணம், பாரதியார் பாடல், குருவிக்கூடு, குரங்கும் முதலையும் ஆகிய தலைப்புகளில் 18 கதைகளும் இடம்பெற்றுள்ளன.