க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் பிரின்டர்ஸ், 94 பரமானந்த விகாரை மாவத்தை).
99 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.
திருக்கோணமலை மாவட்டத்தில் கருங்குவேலி என்னும் இடத்தில் மாவலி கங்கைக் கரையில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த சிவாலயங்களுள் ஒன்று திருக்கரசையம்பதி. திருமங்கலாய்ச் சிவன்கோவில் என்றும், அகஸ்தியஸ்தாபனம் என்றும் வழங்கப்பெறும் இத்தலம் பழமைவாய்ந்த தலபுராணம் ஒன்றினைக் கொண்டிருக்கும் சிறப்பினைப் பெற்றது. திருக்கரைசைப் புராணம் என்னும் பெயரிலான அப்புராணம் (13ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 14ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவரான உமாபதி சிவாசாரியாரின் சீடர் என ஊகிக்கப்படும்) பெயரறியாப் புலவர் ஒருவராற் பாடப்பெற்றது. திருக்கரைசைப் புராணம் முன்னே கடவுள் வாழ்த்து அமைய அதனையடுத்து இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் என்னும் நான்கு சருக்கங்களில் அமைந்த 170 பாடல்களில் அமைந்த சிறியதொரு புராணமாகும். திருக்கரைசைப் புராணம் பாடப்பட்ட காலம் எது எனத் தெளிவாகத் தெரியவில்லை. அதன் ஆசிரியர் யார் என்பதும் தெரியவில்லை. ஆனால் ஆசிரியர் தமது குருவைப் பற்றிக் கூறுவனவற்றைக்கொண்டு அதன் காலத்தை ஓரளவு தீர்மானிக்கலாம். இலக்கிய நயமும் பக்திச் சிறப்பும் வாய்ந்த திருக்கரைசைப் புராணத்திற்கு சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் உரை எழுதியிருக்கிறார். ஏட்டுப்பிரதிகளிலிருந்த இந்நூலை புலவரவர்களுக்கு வழங்கி அவரது உரையுடன் முதன்முதலில் 1893இல் அச்சுவாகனமேற்றியவர் திருக்கோணமலை தந்த தமிழறிஞர் வே.அகிலேசபிள்ளையவர்களாவார்.