ச.பஞ்சாட்சர சர்மா. யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, பெப்ரவரி 2008, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (சுன்னாகம்: சிறீ வித்யா கம்பியூட்டர் பிரஸ், கந்தசாமி கோவிலடி, இணுவில்).
76 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.
ஒலியெழுத்து, வடிவெழுத்துக்களின் வேறுபாடு மாத்திரமன்றி அவற்றைக் கற்பிக்கும் பழைய போதனாமுறைகளும் வடமொழிப் பயிற்சிக்குத் தடையாக இருந்துவந்துள்ளன. இம்முறையிலிருந்து விலகிப் பாலபாடம் எழுதிய முதல்வர் பருத்தித்துறைப் பஞ்சாங்க கணிதர் சுப்பிரமணிய சாஸ்திரி. அவருக்குப் பின்னர் வியாகரண சிரோமணி தி.கி.சீதாராமசாஸ்திரி, கலாநிதி கா.கைலாசநாதக் குருக்கள் ஆகியோர் தேவநாகரியிலும், பிரம்மஸ்ரீ தி.நடனசபாபதி சர்மா கிரந்தத்திலும் பாலபாடங்களை வெவ்வேறு வழிகளைக் கையாண்டு எழுதி வெளியிட்டனர். இவர்களின் வழிகளிலிருந்து முற்றிலும் வேறான புத்தம்புதிய முறையில் ஆக்கப்பட்டது அக்ஷர போதினி என்னும் இந்நூல். நான்கு படிகளைக்கொண்ட இந்நூலில் முதற்படியில் இருமொழிகளுக்கும் பொதுவான உச்சரிப்புள்ள 25 எழுத்துக்களும், 200 சொற்களும் 30 வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்துக்கும் சொல்லுக்கும் பக்கத்தில் கிரந்தத்திலும் தமிழிலும் எழுத்துக்களும் சொற்களும் தரப்பட்டுள்ளன. சிறப்பெழுத்துக்களையும் சிறப்பு மெய்யெழுத்துக்களையும் அறிமுகஞ்செய்யும் இரண்டாம் மூன்றாம் படிகளில் 500க்கு மேற்பட்ட சொற்களும் 100 வாக்கியங்களும் வந்திருக்கின்றன. இந்நூலில் கூட்டெழுத்துக்கள் நான்காம் படியில் விளக்கப்படுகின்றன. இலகுவானவை முதலிலும் கஷ்டமானவை பின்னுமாக இனம்பிரித்து இவை விளக்கப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 196451).