சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 4வது பதிப்பு, 1966, 1வது பதிப்பு, டிசம்பர் 1956. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்-புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).
xii, 260 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21×13.5 சமீ.
இந்நூலில் எழுத்துக்கள், சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியங்கள், விளக்கங்கள், கட்டுரைகள் என ஆறு இயல்களாக வகுத்து தமிழ் மொழிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எழுத்துக்கள் என்ற முதலாவது பகுதியில் எழுத்தும் பயனும், தமிழ் எழுத்துக்களின் வகை, குறில் நெடில் விளக்கம், எழுத்துக் குடும்பம், நன்றாக உச்சரிப்போம், எழுத்தின் ஒலி அளவு, எழுத்தொலி குறுகியும் கூடியும் ஒலித்தல், எழுத்துப் போலி, எழுத்துக்களின் நிலை, மெய்கள் ஒன்றோடொன்று சேருதல், ணகர னகர வேறுபாடு, றகர ரகர வேறுபாடு, லகர ழகர வேறுபாடு, திசை மொழிகள், சில வடமொழிக்கேற்ற தமிழ்ச் சொற்கள் ஆகிய 15 உப பிரிவுகளில் இவ்விடயம் விளக்கப்பட்டுள்ளது. சொற்கள் என்ற பகுதியில், சொல் சொல்வதென்ன, இடுகுறிப்பெயர்-காரணப் பெயர், பண்புப் பெயர், தொழிற்பெயர், ஆகுபெயர் இன்னோரன்ன 16 தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. சொற்றொடர்கள் என்ற பகுதியில் இரட்டைச் சொற்கள், அடுக்குச் சொற்கள், சிலேடை மொழிகள், சொற் புணர்ச்சி, இணைச் சொற்றொடர் முதலான 10 தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. வாக்கியங்கள் என்ற பகுதியில் வாக்கியம், தன்கூற்று-பிறன்கூற்று, நிறுத்தற் குறிகள், திருத்தமான தமிழ் ஆகிய நான்கு விடயங்களும், விளக்கங்கள் என்ற பகுதியில் இவர்கள் யார், கதை படிப்போம், மொழி வளர்ச்சி, கம்பர் காட்டும் காட்சி, காட்டில் பொங்கும் இசையமுது, களிமண்ணின் உபயோகம், தலை ஏன் நரைக்கவில்லை, அடிமைத் தொழிலில் அரசியார், சுவைக் கவிதைகள் ஆகிய பத்துத் தலைப்புகளிலும் விளக்கப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியான கட்டுரைகள் என்ற பிரிவில் கதையாக்கஞ் செய்வோம், கடிதம் எழுதுவோம், கட்டுரை எழுதுவோம் ஆகிய மூன்று விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆறு இயல்களிலும் மொத்தம் 58 உப தலைப்புகளில் விடயங்கள் வகுத்து விளக்கப்பட்டுள்ளன.