சி.பத்மநாதன். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
Lii, iv, 584 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 23×14.5 சமீ., ISBN: 955-9233-10-6.
இந்நூல் இலங்கையில் 13ஆம் நூற்றாண்டு இறுதி வரை எழுதப்பட்ட தமிழ்ச் சாசனங்களைப் பற்றியது. இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய மூலங்களிலே சாசனங்கள் முதன்மையானவையும் பிரதானமானவையுமாகும். அவற்றுட் பெரும்பாலானவற்றின் வாசகங்களும் அவற்றைப் பற்றிய விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழ்ச் சாசனங்களும் பூர்வாங்க வெளியீடுகளும், அனுராதபுர காலத்துச் சாசனங்கள், சோழர் காலத்துச் சாசனங்கள், பொலன்னறுவைக் காலத்துச் சாசனங்கள் -1: பிரமதேயங்களின் சாசனங்கள், பொலன்னறுவைக் காலத்துச் சாசனங்கள் -2, பொலன்னறுவைக் காலத்துச் சாசனங்கள் -3: படைவீரரின் சாசனங்கள், பொலன்னறுவைக் காலத்துச் சாசனங்கள் -4: அரசரின் பிரகடனங்களும் கோயிற் சாசனங்களும் ஆகிய பிரதான ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கி.பி. 700-1300 இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட சாசனங்களின் வாசகங்களை உள்ளடக்கிய வரலாற்று ஆய்வு நூல் இது. காலக்கிரம வரிசையிலே இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ச் சாசனங்களை விளக்கும் இந்நூல் இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய பரிமாணத்தையும் பெற்றுள்ள அதேவேளையில் இந்து-பௌத்த மதங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்களையும், இலங்கை வரலாறு பற்றிய சில பிரதானமான விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள சில சாசனங்களை முதன் முதலாக பேராசிரியர் சி.பத்மநாதனே வாசித்துப் பதிவுசெய்தவர். அவற்றையும் இந்நூலில் விளக்கியுள்ளார். அம்பாந்தோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நானொதேசிகளின் வெண்கல முத்திரையிலுள்ள சாசனம், பொலந்நறுவையிலுள்ள வேளைக்காறரின் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, கஜபாகுத் தேவர் காலத்துக் கந்தளாய்ச் சாசனம், கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ள இரண்டாம் சோழ இலங்கேஸ்வரனான ராஜேந்திரசோழனின் காலத்துக் கல்வெட்டு என்பவை குறிப்பிடத்தக்கவை. புதுமுத்தாவையில் உள்ள கற்பலகைச் சாசனத்தைப் பார்வையிட்ட செனரத் பரணவிதான என்ற இலங்கையின் ஆராய்ச்சியாளர், அதில் ஓரெழுத்தேனும் தெளிவாகவில்லை என்று கூறிச்செல்ல, அதனை இரு தடவைகளில் ஆராய்ந்து அது ஐந்நூற்றுவர் என்னும் வணிகர் கணம் பற்றியது என்றும், அது விக்கிரமசலாமேகபுரம் என்னும் வணிக நகரைகுறிப்பிடுகிறது என்றும் பேராசிரியர் சி.பத்மநாதனே ஆய்வுலகிற்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே ஜப்பானிய பேராசிரியர் காறஷீமா உள்ளிட்ட பல உலக சாசன ஆய்வாளர்களை இலங்கையின் தமிழ்ச்சாசனங்கள் பற்றிய ஆய்வுக்கும் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199508).