12965 – வீரசங்கிலியன்: பாகம் 1.

ம.க.அ.அந்தனிசில் (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம்).

x, 47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14.5 சமீ.

யாழ்ப்பாண மன்னன் சங்கிலியன் பற்றிய வரலாற்று இலக்கியமாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. ஈழநாடு பத்திரிகையில் 1979ஆம் ஆண்டு தொடர் கட்டுரையாக, 21.10.1979 இல் தொடங்கி 18.11.1979 வரை ஐந்து வாரங்கள் வெளிவந்தது. பின்னர் சிறிய இடைவெளியின் பின்னர் 16.12.1979இல் இறுதிப்பகுதி வெளிவந்தது. இவ்விதழில் சங்கிலி மன்னன் ஆட்சிபீடம் ஏறியது வரையிலான வரலாறு சொல்லப்பட்டிருந்தது. 16.12.1979 இதழில் கட்டுரையின் இறுதியில், ‘சங்கிலி மன்னனின் ஆட்சி நிர்வாகம் எப்படியிருந்ததென்பதை அடுத்த வாரமலரில் காண்க’ என்றிருந்தது. தொடர்ந்து எழுதுவதில் அவருக்கிருந்த தடைகள் காரணமாக இத்தொடர் பின்னர் தொடரவேயில்லை என்பது சோகமான செய்தியாகும். ‘சங்கிலி அரண்மனை பாதுகாக்கப்படுமா?’ என்ற தலைப்பில் ஈழநாடு 04.10.1979 இதழில் வெளிவந்த கட்டுரையும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. ம. க. அ. அந்தனிசில் (31.12.1934-09.07.2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்கதொரு எழுத்தாளரும், பத்திரிகையாளருமாவார். தீப்பொறி, ஒரு தீப்பொறி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களை தமது பத்திரிகைகளில் எழுதியவர். 1967 இல் தீப்பொறி, 1970 இல் பல்கலை ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர். இவரது தீப்பொறி பத்திரிகை இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதை அடுத்து, 1972 இல் ஒரு தீப்பொறியைத் தொடங்கி நடத்தினார். இவரது அடுக்குமொழித் தலைப்புக்கள் நீண்ட காலம் பொதுமக்களால் பேசப்பட்டுவந்தன. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக யாழ்ப்பாண நீதி மன்றம் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. இவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரரும் ஆவார். தமது இறுதிக் காலத்தில் தமிழின் தொன்மையையும் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்தும் கருத்துச் செறிவுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில் தொடராக எழுதி வந்தார். விவிலியக் கதைகளை தமிழில் எழுதினார். சொல்லேருழவர் என இவர் அழைக்கப்பட்டார். தமது இறுதிக் காலத்தில் கண்பார்வைக் கோளாறையும், நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கும் உள்ளான நிலையில், அந்தனிசில் மட்டக்களப்பில் 2005 இல் காலமானார். (‘சங்கிலி மன்னன்’ பற்றிய பேராசிரியர் சி.பத்மநாதனின் கூற்று இங்கு குறிப்பிடல் பொருத்தமானது: ‘யாழ்ப்பாண மன்னர்களில் இருவர் சங்கிலி எனும் பெயருடையோர். முதலாம் சங்கிலி (1519-1561) வலிமை படைத்த அரசன். துப்பாக்கி, பீரங்கி முதலிய நவீன ஆயுதங்களை யாழ்ப்பாணப் படைகளுக்கு முதன்முதலாக வழங்கியவன். சாதுரியமானவன் தந்திரசாலி. கோவையிலுள்ள அரச பிரதிநிதியின் தலைமையில் படையெடுத்து வந்த போர்த்துக்கேயரின் பலமான சேனையை வெற்றியேற்றியமை சங்கிலியனின் சிறப்புமிக்க சாதனை. போர்த்துக்கேயருக்கு எதிரான போர்கள் இடையறாது நடைபெறவேண்டும் என்பது சங்கிலியின் நிலைப்பாடு. புத்த சமயத்தைப் பாதுகாப்பதற்குப் போர்த்துக்கேயருக்கெதிரான போரைத் தொடங்குமாறு அவன் மாயதுன்னையை வலியுறுத்தினான். படையுதவி தருவதாகவும் சொன்னான். இரண்டாம் சங்கிலி 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே சில வருடங்கள் அதிகாரஞ்செய்தவன். அரசகேசரி எனும் அறிஞரைப் படுகொலை செய்தவன். 1691இலே போர்த்துக்கேயர் போரிலே சங்கிலி குமாரனைக் கைப்பற்றிச் சென்றனர். யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ந்தது. இவர்களைக் காட்டிலும் மிகச்சிறந்த மன்னர்கள் யாழ்ப்பாணத்தில் முற்காலத்தில் அரசு புரிந்தனர். பலமான கடற்படையைக் கொண்டிருந்தனர். ஆரியச் சக்கரவர்த்தியின் 100 வணிகக் கப்பல்கள் யெமென் நாட்டுக்குப் பிரயாணம் செய்வதைக் கண்டதாக இபுன் பத்தூத்தா சொல்வார். தமிழின் தேசிய அடையாளமான தேசவளமைக்கு அவர்களே வடிவம் கொடுத்தனர். மருத்துவ நூற் களஞ்சியமான பரராசசேகரம் போன்ற தொகுதிகளும் தக்ஷpணகைலாச புராணம் முதலான நூல்களும் அவர்கள் உருவாக்கிய அருஞ்செல்வங்கள்’.)

மேலும் பார்க்க: 13A04, 13A30

ஏனைய பதிவுகள்

12944 – வண. கலாநிதி ஹயசிந்து சிங்கராயர் தாவீதடிகளார்.

ஸ்ரீலங்கா புத்தகசாலை. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). 33 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 20.5 x 13.5 சமீ.

14176 ஸ்ரீ முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா ஸமேத முன்னநாதஸ்வாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக மலர் -1963.

தேவஸ்தானத்தார். சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், கார்யகலாமந்திரம், 1வது பதிப்பு, ஜுலை 1963. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6) 87 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 25×19 சமீ. 01.07.1963 அன்று