ஆறுமுகம் சின்னத்தம்பி. வரணி: வித்துவான் ஆறுமுகம் சின்னத்தம்பி, தம்பான், வரணி வடக்கு குறிச்சி, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி).
viii, 148 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.
வரணியூர் பண்டித வித்துவான் ஆ.சின்னத்தம்பி இயற்றிய இந்நூல், பண்டைய இலக்கிய நூல்களின் ஆதாரங்களுடன் ஈழநாடு ஒரு காலத்தில் குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனவும், அது பின்னர் ஏற்பட்ட கடல்கோள் காரணமாகத் தனித் தீவாகியது எனவும், குமரிக்கண்டத்து மக்கள் தமிழரே என்பதால் ஈழத்து மக்களும் தமிழரே எனவும் நிறுவ முற்படுகின்றார். ‘ பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்னும் சிலப்பதிகாரச் செய்யுளடி மூலம் குமரி எனப் பெயர் வழங்கப்பெற்ற ஒரு பெரிய மலையும் பஃறுளியாறும் கடலுக்குள் அமிழ்ந்தன எனக் காண்கிறார். இக்கடல் கோள் காரணமாகவே குமரிக்கண்டம் சிதைவுற்று தமிழ் நாட்டின் தென் கோடியில் ஈழம், இராமேஸ்வரம் உள்ளிட்ட தீவுகள் ஏற்பட்டன எனக் குறிப்பிடுகிறார். தொல்லியல் ஆதாரங்களன்றி, வரலாற்றுத் தரவாக இந்நூலில் இலக்கியச் சான்றுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. பூர்வகாலம்: குமரிநாடும் ஈழமும், சங்ககால ஆரம்பம், ஈழமும் வரலாறும், விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும், படை எழுச்சிகளும் விளைவும், கலிங்க மாகன் படைஎழுச்சி, ஈழமும் தமிழர் ஆதிக்கமும் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பண்டிதர் இ.நவரத்தினம் எழுதிய நூலாசிரியர் வரலாறு நூலின் முகவுரையாகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 105206).