திக்குவல்லை ஸப்வான் (தொகுப்பாசிரியர்). காரைநகர்: காரைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம், 1வது பதிப்பு, 1990. (காரைநகர்: பாலா அச்சகம்).
26 பக்கம், விலை: ரூபா 7.50, அளவு: 21.5×14 சமீ.
க.பொ.த.ப. (சா.த.) 10ஆம், 11ஆம் ஆண்டு மாணவர்களுக்குரிய தமிழ் இலக்கியம் என்னும் பாடநூலில் வரும் தேர்ந்த சீறாப்புராணச் செய்யுள்களின் பொருள் முதலியன இந்நூலில் இடம்பெறுகின்றன. உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களுள் முக்கியமானது. இப்புராணம், முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரது பிறப்பு, திருமணம், வெற்றி முதலியவற்றின் வரலாற்றைக் கூறுகின்றது. சீறத் (வாழ்க்கை வரலாறு) என்னும் அரபிச் சொல்லிலிருந்து சீறா என்னும் சொல் தோன்றியது. சீறாப்புராணம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைப்பற்றிக் கூறும் காவியமாகும். இந்நூல் விலாதத்துக் (பிறப்புக்)காண்டம், நுபுவத்துக் (தீர்க்கதரிசனக்) காண்டம், ஹீஜ்ரத்துக் (மக்காவை விட்டு மதீனாவுக்கு இடம்பெயர்தல்) காண்டம் ஆகிய மூன்று காண்டங்களைக் கொண்டது. மேற்படி மூன்று காண்டங்களும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாக்களையும் கொண்டன. 19.5.1954இல் பிறந்த நூலாசிரியர் முகம்மது முகம்மது ஸப்வான் வெலிகம பிரதேசத்தில் கிராமசேவையாளராகப் பணியாற்றுகின்றார். உம்மாவுக்கு ஒரு சேலை என்ற சிறுகதைத் தொகுதி உள்ளிட்ட பல இலக்கிய உப பாட நூல்களின் ஆசிரியர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80449).