எம்.எல்.எம்.அபுசாலி. பலாங்கொடை: எம்.எல்.எம்.அபுசாலி, 1வது பதிப்பு, 2002. (அச்சக விபரம்தரப்படவில்லை).
xix, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97801-2-3.
பலாங்கொடையில் இருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி பிரதேசம் தொல்பொருள் ஆய்வுக்குரிய பாதுகாப்புப் பிரதேசமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அங்குள்ள பிரபல்யமான பள்ளிவாசல் நீங்கலாக மற்றைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு அகழ்வாராய்வுக்கு உட்படுத்தத் திட்டமிடப்பட்டது. இத்தகைய பின்புலத்தில் தப்தர் ஜெய்லானி பற்றிய வரலாற்றுப் பதிவாக இந்நூல் அமைகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் இறைநேசர், இறைநேசரின் அற்புதங்கள், இலங்கையும் இஸ்லாமும் மத்திய கிழக்கும், தப்தர் ஜெய்லானி, மீள்கண்டுபிடிப்பு, தரிசித்தவர்களும் அறிக்கைகளும், பாதுகாப்பதற்கும், காப்பதற்குமான வழக்காடல், ஜெய்லானி கந்தூரி, தப்தர் ஜெய்லானியைப் பற்றிய மரபுவழிக் கதைகள் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் தப்தர் ஜெய்லானி பற்றிய விளக்கத்தினை வழங்குகின்றது. பின்னிணைப்புகளாக ஒழுங்கு முறைப்படி சூபிமாரின் பெயர்ப்பட்டியல், மேன்மைதங்கிய ஹஸருத் கௌசுல் அஸாம் ஜீலானி, டிரஸ்டிமார்களின் பெயர்ப்பட்டியல் (1890-2001), வரலாற்று ஆதாரங்கள் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. நூலசிரியர் அபுசாலி சுயேட்சை வேட்பாளராக பலாங்கொடைப் பிரதேசத்திலிருந்து அரசியலில் இறங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றுகின்றார். 1977இல் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டவர். இரத்தினபுரி மாவட்ட அமைச்சராகவும் (1978-1982), மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் (1982-1988), பெருந்தோட்ட சேவைகளுக்கான இராஜாங்க அமைச்சராகவும் (1990-1993), தொழில் தொழில் பயிற்சி அமைச்சரவை அமைச்சராகவும் (1993-1994) சேவையாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 204062).