9242 அமைதியின் குரல்: சம்பவத் தொகுப்பு.

ஜனசங்சதய (ஆங்கில மூலம்), திக்வல்லை கமால் (தமிழாக்கம்). பாணந்துறை: ஜனசங்சதய, 81/2, ஆர்தர் வீ. டயஸ் மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 121 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1687-27-4.

டெய்லி மிரர் பத்திரிகையில் Voice of Voiceless என்ற பத்தியில் தொடராக வெளிவந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு இதுவாகும். ஜனசங்சதய என்ற அமைப்பின் மூலம் உலகுக்கு வெளிக்கொண்டுவரப்பட்ட 39 உண்மைச்சம்பவங்கள் இவை. சமூகத்தின் மூலை முடுக்குகளில் இடம்பெறுவதுடன் எவரது கவனத்தையும் கவராதுபோன உண்மை மனிதர்களின் கதைகள் இவை. தமக்கு நேர்ந்த சில சம்பவங்களை, பயம், வெட்கம் காரணமாக வெளிப்படுத்தத் தயங்குபவர்களுக்கு உதவும் அமைப்பு ஜனசங்சதய என்பதாகும். இவ்வமைப்பினைப்பற்றித் தாமே கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்கள். ‘பொதுமக்கள் பயம் வெட்கம் காரணமாகத் தமக்கு நேர்ந்த சம்பவங்களை, தமது வாழ்க்கையையே சீரழித்த நிகழ்வுகளை வெளியே சொல்லத் தயங்கி வாழ்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஜனசங்சதய நிழல் கொடுக்கிறது. மோசடி, இலஞ்சம், அச்சுறுத்தல், துஷ்பிரயோகம், அகங்காரம், பயமூட்டல் போன்றவற்றுக்குள்ளானவர்கள் எந்தத் தடையுமில்லாமல் ஜனசங்சதயவுக்குத் தங்கள் கதையைச் சொல்கிறார்கள். இப்படியானவர்கள் கிராமம் நகரம் என்று வேறுபாடின்றி பலபக்கங்களிலிருந்தும் வருகிறார்கள். சட்ட உதவி, உளவியல் ஆலோசனைகள், தேவைப்படுமிடத்து நிதியுதவி போன்றவற்றையும் ஜனசங்சதய அவர்களுக்கு வழங்குகின்றது. எமது தொண்டர்கள் அவர்களைத் தேடிக்கொண்டு பின்தங்கிய கிராமங்களுக்குக் கூடச் செல்கின்றார்கள். அவர்களோடு கலந்துரையாடி அவர்களுக்கு எவ்வாறு உதவவேண்டுமென்பதைக் கண்டறிவார்கள். அதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் ஜனசங்சதயவின் பிரச்சினையாக மாறிவிடும். ஜனசங்சதய பல்வேறு கண்காட்சிகளையும் விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்திவருகின்றது. ஜனசங்சதயவுடன் சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவங்களைப் பொதுமக்கள் கோணத்திலிருந்து இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்