9280 கழுகு நிழல்: கட்டுரைத் தொகுதி.

கோவை நந்தன். பாரிஸ்: நிச்சாமம் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜனவரி 2013.(சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

310 பக்கம், விலை: இந்திய ரூபா 195., அளவு: 21.5×14 சமீ.

யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்து, ஈழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து பின்னாளில் பாரிசில் புலம்பெயர்ந்து வாழும் கோவை நந்தனின் 45 அரசறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. பல்வேறு நாடுகளில் பல தளங்களில் ஏற்பட்ட அதிர்வுகளையும் ஆச்சரியங்களையும், கொடுமைகளையும், மோசடிகளையும், முகத்திரைகளையும் தன் பார்வையில் விமர்சனமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவை தினமுரசு, தமிழ் லெமூரியா ஆகிய பத்திரிகைகளிலும் எறிகணை, தேனீ, எங்கள் தேசம், சலசலப்பு ஆகிய இணையத் தளங்களிலும்  வெளியானவை. போலித்தனமான மேற்பூச்சற்ற வகையில் ஈழத்தமிழரின் யதார்த்த அரசியல் விழிப்புணர்வில் அக்கறைகாட்டுவதுடன் மட்டும் நில்லாது சர்வதேச நிலைமைகளையும் தமிழ்மக்களின் அறிவுத்தேடலுக்காக முன்வைக்கின்றார். அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை பல கட்டுரைகளில் பட்டியலிடும் இவர் அதே நோக்கில் பொதுவுடைமை ஆட்சியில் கேரளம் முல்லைப் பெரியாறு அணையில் நடந்தகொண்ட முறைமையைச் சாடுகிறார். பண்டைய நூபியா என்ற இன்றைய தென் சூடான் நாடு புதிதாக அமைந்த காரணங்கள், ருவாண்டாவின் இனப்படுகொலைகளின் பின்னணி என ஆபிரிக்க நிகழ்வுகளையும் அலசுவதுடன் ராஜீவ் காந்தியின் கொலையில் அராஜகப் பின்னணி இருந்ததையும் காட்டுகிறார். பரந்த உலக அறிவை அறிந்து தமது சிந்தனையை விரிவாக்க முனையும் தமிழ் வாசகரை நோக்கியதாக இக்கட்டுரைத்தொகுப்பு அமைகின்றது.                      

ஏனைய பதிவுகள்