மலர்க்குழு. ஜேர்மனி: Tamilischer Bildungsverein, Deutschland e.V, Postfach 1646, 59159 Kamen, 1வது பதிப்பு, ஜுன் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
98 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
1989ஆம் ஆண்டில் தை 18இல் டோட்முண்ட் கரித்தாஸ் நிறுவன உதவியுடன் தொடக்கப்பட்ட ஜேர்மன் தமிழ்க்கல்விச் சேவை தனது இருபத்தைந்தாவது ஆண்டை வெள்ளிவிழாவாகக் கொண்டாடிய வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.
இருபத்தைந்து ஆண்டுக்காலத்தில் ஜேர்மன் தமிழர் சமூகத்தில் தமிழ்க்கல்வி ஏற்படுத்திய மாற்றங்களை இம்மலர் ஒரு ஐந்தொகையாகக் காட்டுகின்றது. ஜேர்மன் தமிழ்க்கல்விச் சேவையின் பணிகள் பல்பரிமாணம் கொண்டவை. அவை தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்குவதுடன் மட்டும் நிற்கவில்லை. தமிழ்மொழிப் பொதுப்பரீட்சையொன்றை ஒவ்வொரு ஆண்டும் நடத்திச் சான்றிதழ் வழங்கல், கல்விக் கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் என்பவற்றை நடத்துதல், வேற்றுமொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல், மாணவர் கருத்துக்களம் நடத்துதல், கலைநிகழ்ச்சிகளை மாணவர்களிடையே ஊக்குவித்தல், பயிற்சிப் புத்தகங்கள், சிறுவர் நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றைத் தயாரித்தல், வெளியிடல், அதன் மூலம் இரண்டாம் தலைமுறை தமிழ் எழுத்தாளர்களை புகலிடத்தில் உருவாக்குதல் என நீண்ட பணிகளை முன்னெடுத்துவந்துள்ளது. இம்மலரின் வெளியீட்டுக்குழுவில் பொ. ஸ்ரீஜீவகன், கலாதேவி மகேந்திரன், வயிரமுத்து சிவராஜா, அம்பலவன் புவனேந்திரன், பொன்னையா புத்திசிகாமணி, கிளி சிறீஜீவகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளன.