அ.குமாரசுவாமிப் புலவர் (உரையாசிரியர்), கு.அம்பலவாணபிள்ளை (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: கு.அம்பலவாணபிள்ளை, சுன்னாகம், 2வது பதிப்பு, 1926, 1வது பதிப்பு, 1903. (சிதம்பரம்: ச.விசுவநாதபிள்ளை, தருமபரிபாலகர், வித்தியாநுபாலனயந்திரசாலை).
(8), 232 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.
ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல் பொருள், யாப்பு அணி என்பவற்றில் அணியிலக்கணத்தை விளக்கி 946-1070 காலகட்டத்தில் தண்டி என்பவரால் எழுதப்பட்டது தண்டியலங்காரமாகும். காவியதர்சம் எனற சம்ஸ்கிருத நூலைத் தழுவி எழுதப்பட்ட தண்டியலங்காரத்தில் இலக்கணத்தை இயற்றிய தண்டி-ஆசிரியரே இலக்கணத்துக்கான உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்திருந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அக்கிராசனாதிபதியும் பாலைவனத்தம் ஜமீன்தாருமாகவிருந்த ராஜராஜஸ்ரீமாந் இராமநாதபுரம் பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் விரும்பியவாறு தண்டியலங்காரத்துக்கு உரையினை 1903இல் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் புதுக்கி எழுதியிருந்தார். முதற்பதிப்பு வெளிவந்ததன் பின்னர் புலவரவர்கள் உரையில் சில திருத்தங்களைச் செய்து வைத்திருந்தார். அதனை அவரது மகனார் கு.அம்பலவாணபிள்ளை அவர்கள் 1926இல் மீளவும் இரண்டாவது பதிப்பாக பதிப்பித்திருக்கிறார். உபக்கிரமணிகை, தண்டியலங்காரம் மூலமும் உரையும் (தற்சிறப்புப் பாயிரம், பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்), அருஞ்சொற்றொடர்ப் பொருள் கோள், அருஞ்சொற்பொருள்கோள், விஷயக்கிரமசூசிகை, அரும்பதவகராதி, சூத்திரக் கிரமசூசிகை ஆகிய அத்தியாயங்களாக இந்நூல் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.