என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், பிரித்தானியக் கிளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
110 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-0-954944-10-0.
இந்தக் கவிதைத் தொகுப்பு, தமது மனதுக்கு நெருக்கமானதொரு அறிவாலயத்தை அநியாயமாகப் பறிகொடுத்த ஒரு இனத்தின் வலிமிகுந்த வரிகளைக் கொண்டுள்ளது. பல்துறை சார்ந்தவர்களாலும், பல்வேறு இலக்கியத்தரம் கொண்டவர்களாலும் அவ்வப்போது எழுதப்பட்டவை. இத்தொகுப்பில் ஈழத்தின் முதுபெரும் கவிஞர்களான முருகையன், எம்.ஏ.நுஹ்மான், சோ.பத்மநாதன், பண்டிதர் வீரகத்தி, சு.வில்வரத்தினம் போன்றோரின் கவிதைகளும் உள்ளன. சாம்பல் குவியலின் நடுவே நின்று தீ தின்ற நூல்களின் பக்கங்களின் கருகிய நெடியைச் சுவாசித்தபடி எழுதப்பட்ட ஒரு அமெரிக்கப் பயணியின் கவிதையும் இதில் அடங்கியுள்ளது. தாயக மண்ணில் வாழ்ந்துவரும் மாணவச் சமூகத்தை நோக்கி யாழ்ப்பாண நூலகம் பற்றிய கவிதை எழுதுங்கள் என்றதும் தாம் நேரில் காணாத போதிலும் கேள்விஞானத்தில் அதனைக் கவிதையாக எழுதிய சாதாரண பள்ளி மாணவரின் கவிதைகளும் உண்டு. புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் மனதில் மாறாத வலிகளைச்சுமந்து நிற்கும் புகலிடக் கவிஞர்கள் யுகசாரதி- கருணானந்தராஜா, இளைய அப்துல்லாஹ், வேதா இலங்காதிலகம், நகுலா சிவநாதன் போன்றோரின் கவிதைகளும் இதில் அடங்குகின்றன. மொத்தத்தில் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகிய கவிதைகளை தரம்பிரித்துத் தேர்வுசெய்யாமல், அவரவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிந்தவரை நிறைவை நோக்கிய ஒரு தொகுப்பாகத் தேடித் தொகுத்து ஒரே நூலில் பதிவுசெய்துள்ளார்.