கு.றஜீபன். யாழ்ப்பாணம்: சித்தி விநாயகர் நூல்நிலையம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2011. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ்).
34 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ.
கவிஞரின் ஐந்தாவது கவிதைத் தொகுதியாக வெளிவந்துள்ள நூல். தொல்காப்பியம்-பொருளதிகாரத்தில் வரும் மெய்ப்பாட்டியலில் அகத்திணையின் களவொழுக்கத்தில் இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள் எவை என்பதைத் தொல்காப்பியர் தெளிவாக்கும் வகையில் “புதுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் நகுநயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு தகுமுறை நான்கே ஒன்றென மொழிப’ என்று ஒரு சூத்திரத்தில் குறிப்பிடுகின்றார். ஒரு பெண்ணின் மனதில் காதல் உணர்வு தோன்றியபின் அதனை நாணத்தின் மேலீட்டால் அவள் மறைக்க முயல்தலையே நகுநயம் மறைத்தல் என்பர். இங்கு ரஜீபன் தொல்காப்பியரின் வழிமுறையில் தான் வாழும் காலச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகள் மாற்றங்கள் என்பவற்றை படம்பிடித்து சிருங்கார ரசத்தினூடு தன் கவிதைகளில் அள்ளி வழங்குகின்றார். இங்கு மரபிலக்கிய வகைமைக்கு புத்திலக்கிய வடிவத்தை இவர் வழங்குகின்றார்.