சூசை எட்வேட். திருக்கோணமலை: இந்திரா எட்வேட், 1004, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 2013. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டர்ஸ்).
216 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0469-23-9.
வீரகேசரி, தினக்குரல், ஞானம், பூங்காவனம், ஜீவநதி, மல்லிகை ஆகிய ஊடகங்களில் வெளியாகிய ஆசிரியரின் 15 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவன்தான் மனிதன், பக்தர்கள் செய்த பாவம், எது மனித சாதி, மனிதம் மலர்க, மாயை, தாழ்வு மனச் சிக்கலால், காரியவாதி, குருவிப்பாடம், விமோசனம் வருமா, அர்த்தமுள்ள வாழ்வு, பாழாய்ப் போன பொன்விழா, நாயாகிப் போனவன், பிரம்மச்சாரி ஆகிறார், வரலாற்றுப் பயணம், சரித்திரத்தில் ஒரு பதிவு ஆகிய 15 தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. சமூகக் குறைபாடுகள் நீக்கப்படவேண்டும் என்ற வேணவா இக்கதைகளின் நோக்கமாகின்றது. இவன்தான் மனிதன் என்ற கதை- அருமைநாயகத்தைப்போல வாழ்ந்து தியாகியாக வேண்டும் என்ற உணர்வை ஊட்டுகின்றது. பக்தர்கள் செய்த பாவம், எது மனித ஜாதி என்பன சாதிக்கொடுமையைச் சாடுகின்றன. அந்தோனியாரையும் பறையனாக்கிவிட்டார்களே என்ற கதையில் தெரேசம்மாளின் புலம்பல் கதை சாதியச் சிந்தனைக்குரியது. மனிதம் மலர என்ற கதையின் தியாகுவின் பாத்திரம் மானிட தரிசனத்தின் உயர்வாகப் படைக்கப்பட்டுள்ளது. மாயை யின் பாத்திரம் சிவகுமாரியின் உணர்ச்சிப் போராட்டமாகும். காரியவாதி, தங்கை மீது கொண்ட கோபுவின் அன்பின் வெளிக்காட்டுகையாகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234754).