என்.சிறிரஞ்சன் (தொகுப்பாசிரியர்), த.மயூரநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: என்.சிறிரஞ்சன், 66, 3/3, டேவிட்சன் வீதி, 1வது பதிப்பு, மே 2013. (தெகிவளை: TG,6A, 1/1 பெரேரா ஒழுங்கை).
vii, 78 பக்கம், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44468-0-9.
வாழ்வில் சுய முன்னேற்றம் காணும் வழிவகைகளைத் தரும்; இந்நூல் சிறுவரும் வளர்ந்தோரும் இணைந்து வாசித்துப் பயன்பெறத்தக்கவகையில் எழுதப்பெற்ற சிறுகதைகளைக் கொண்டது. ஆங்கில மூலத்திலிருந்து பெறப்பட்டவையும், தமிழ் இதொபதேச, பஞ்சதந்திரக் கதைகளை மாத்திரம் நம்பியிராமல், வென்றவர்கள் தோற்றவர்கள் என பலரினது வாழ்வினையும் அறிந்து அதன்மூலம் படிப்பினைப்பெற வைப்பதான கற்பனைக் கதைகளையும் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. இக்கதைகள் அனைத்தினதும் ஒரே நோக்கம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதாகவே உள்ளது. கதை முடிவில் உபதேசமும் பொருத்தமான குறளும் மு.வரதராசனாரின் எளிய உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் காணப்படுகின்றன. இலகு வாசிப்பு நூலாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள 35 நீதிக் கதைகளும் பல்வேறு நூல்கள், சஞ்சிகைகள், மற்றும் இணையத்தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும். கணிசமானவை ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. எமக்கு முன்னுள்ள சவால்களை எதிர்கொண்டு அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு அறிவியல் உண்மைகளை உரிய முறையில் பின்பற்றி உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவக்கூடிய சிறுகதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233210).