கே.எஸ்.சுதாகர். அவுஸ்திரேலியா: அக்கினிக்குஞ்சு வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு
176 பக்கம், விலை: இந்திய ரூபா 150.,அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81322-32-1.
இலங்கையிலிருந்து 1995 முதல் புலம்பெயர்ந்து , தற்போது அவுஸ்திரேலியாவில், மெல்பேர்ண் நகரில் வாழும் ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளி சுதாகரின் முதலாவது சிறுகதைத் தொகுதி 2007இல் எங்கே போகின்றோம் என்ற தலைப்புடன் வெளிவந்தது. அதன் பின்னரான கடந்த எட்டு வருடங்களில் வெளியான இவரது கதைகளுள் பரிசுபெற்ற பன்னிரு கதைகள், சுதாகரின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பான இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விளக்கின் இருள், இரண்டு சம்பவங்கள், இருவேறு பார்வைகள், காட்சிப்பிழை, ஒரு கடிதத்தின் விலை, சேர்ப்பிரைஸ் விசிட், பறக்காத பறவைகள், ஒரு வகை உறவு, அசலும் நகலும், கற்றுக்கொள்வதற்கு, எதிர்கொள்ளல், புதிய வருகை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. முன்னர் அக்கினிக்குஞ்சு இணையத்தில் இவை பிரசுரமானவை. யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த கே.எஸ்.சுதாகர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். இவரது முதல் சிறுகதை 1983இல் ஈழநாடு பத்திரிகையில் வெளியாகியது. கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்து. ஆகிய துறைகளில் எழுதிவரும்இவரது படைப்புகள் ஈழநாடு, முரசொலி, சிந்தாமணி, உதயம், உள்ளம், அக்கினிக்குஞ்சு, பாலம், கலப்பை, ஞானம், யுகமாயினி, தென்றல், செம்மலர் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (மெல்பேர்ண்), அவுஸ்திரேலியா, மரத்தடி-இணையம், இலண்டன் பூபாள ராகங்கள், ஞானம் (2006), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.