மலர்க்குழு. யாழ்ப்பாணம்: மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத் தொடர்பகம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).
48 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும்வரை உண்ணாநிலையிலிருந்து உயிர்நீத்தவர் அன்னை பூபதி (திருமதி பூபதி கணபதிப்பிள்ளை 3.11.1932-19.4.1988). மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராகப் பணியாற்றியவர். போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து அன்னையர் முன்னணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்த வேளையில் 1988 மார்ச் 19 இல் தான் சாகும்வரை உண்ணா நோன்பைத் தொடங்கிய பத்து பிள்ளைகளுக்குத் தாயாரான அன்னை பூபதி, கோரிக்கைகள் இந்திய இராணுவத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் தன் அகவை 56இல், 1988 ஏப்ரல் 19இல் மரணத்தைத் தழுவினார். அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்று பின்னாளில் நினைவு கூரப்பட்டது. இந்நூல் அன்னை பூபதியின் மறைவின் நான்காவது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. அன்னை பூபதி பற்றிய ஏழு ஆக்கங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. அநீதிக்கு சவால் விடுத்த அன்னை பூபதி, புரட்சியின் புயல்தான் அன்னை பூபதி, தமிழீழ மண் சிவந்தது, அன்னை பூபதி மக்கள் எழுச்சியின் ஓர் வடிவம், அன்னை பூபதி, பூபதியே நீ புதைக்கப்படவில்லை, தமிழர் இதயமெங்கும் வேரோடிவிட்ட விருட்சம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் படைப்புக்களை உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 94696).