க.க.உதயகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், 36, புகையிரத நிலைய வீதி).
vi, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் வாழ்வும் பணியும் பற்றிய இந்த நூல் கொழும்புத் தமிழச்சங்கத்தின் நாவலர் விழாவினையொட்டி வெளியிடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தைப் பரவாமல் தடுக்க முயன்றதால் கிறிஸ்தவர்களுக்கும், சைவசமயத்தில் சீர்திருத்தம் செய்ய முனைந்ததால் சைவ சமயத்தவர்களுக்கும், ஊழல்களை எதிர்த்துப் போராடியதால் அரச அதிகாரிகளுக்கும் எதிரியானவர் நாவலர். ஆயினும் அவரது தூய பணியால் இன்றும் பேசப்படுபவர். 18.12.1822இல் பிறந்து 57 வருட காலமே வாழ்ந்து 5.12.1879இல் மரணித்தவர் ஆறுமுக நாவலர். அவரது வாழ்வும் பணியும் இந்நூலில் விரிவாகப் பேசப்படுகின்றது. டிசம்பர் 2011இல் கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்திய நாவலர் விழாவின்போது வெளியிடப்பட்ட நூல் இது. இந்நூலைத் தொகுத்தவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கல்விக் குழுச் செயலாளராவார். நாவலர் ஓர் அறிமுகம், நாவலர், கலைக்களஞ்சியத்தில் நாவலர், ஆறுமுக நாவலர் நூற்பட்டியல், நாவலரும் ஈழத்தமிழ் இலக்கியமும், ஆறுமுக நாவலர் எழுதிய குட்டிக்கதை, ஆறுமுக நாவலர் பற்றி அமரர் கல்கி, நாவலர் வாழ்வில் அறிஞர்கள், ஆறுமுக நாவலர் பதிப்பு நெறிமுறை, நாவலரைப் பற்றிய நூல்கள், நாவலருக்கு முத்திரை வெளியீடு, நாவலர் கையெழுத்து மாதிரி ஆகிய 12 உப தலைப்புகளில் இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது.