மலர்க் குழு. மன்னார்: முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, 2012. (மன்னார்: ஜே.எஸ். பிரின்டர்ஸ்).
296 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-955-4609-00-6.
மன்னார் பிரதேசத்தில் கலைப்பணிக்கு அருஞ்சேவையாற்றிய கலைஞர் குழந்தை என கலையுலகில் அழைக்கப்படும் செ.செபமாலையின் கலைப்பணியை கௌரவிக்கும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அவரது 50 ஆண்டுகாலப் பணிகளினது ஐந்தொகையாக இம்மலர் அமைகின்றது. குழந்தை மாஸ்டரின் மகனான அருட்பணி செ.அன்புராசா அடிகளாரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் வெளியீடாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தை மாஸ்டர் தான் சார்ந்த பங்குத் திருச்சபையில் ஆர்வமுள்ள பணியாளராக, கல்விப் புலத்தில் ஆசிரியராக, அதிபராக, கலையுலகில் நாடக, நாட்டுக்கூத்து நடிகனாக, எழுத்தாளராக, நெறியாளனாகப் பணியாற்றியவர். இவர் ஒரு சிறந்த கவிஞனாகவும் தன்னை இனம்காட்டியவர். இம்மலரில் இவருடன் பழகியவர்கள் கட்டுரை, கவிதை, ஆய்வுகளாகத் தமது மனப்பதிவைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். குழந்தை மாஸ்டர் ஊடகங்களுக்கு அவ்வப்போது வழங்கிய நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. 1982இல் முருங்கனில் இடம்பெற்ற பாராட்டுவிழாவிலும், 2009இல் பிரான்சில் நடைபெற்ற பாராட்டுவிழாவின் போதும் வெளியிடப்பட்ட மலர்களிலிருந்து தேர்ந்த கட்டுரைகளும் இதில் மீள்பதிவுக்குள்ளாகியுள்ளன.