கா.பொ.இரத்தினம் (பதிப்பாசிரியர்). சென்னை 14: பழனியப்பா பிரதர்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1966. (சென்னை 14: செந்தமிழ் அச்சகம்).
(8), 120 பக்கம், தகடு, விலை: இந்திய ரூபா 2.50, அளவு: 18.5×12.5 சமீ.
மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் கல்கி- ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களது பன்முக இலக்கியஆளுமைகள் பற்றித் தமிழறிஞர் ஐவர் வழங்கிய உரைகளின் எழுத்துருவே இந்நூலாகும். உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முற்றிலும் முடிக்காத தமிழ் எழுத்தாளர் கல்கியைப் பற்றி ஆங்கில மொழிக்கல்வியில் தேர்ந்து பட்டங்கள் பல பெற்ற ஐந்து பன்னாட்டுத் தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுரைகள் இவை. மலேசியா, தமிழ் நேசன் பத்திரிகை ஆசிரியரும் மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருமான முருகு சுப்பிரமணியம் (கல்கியின் பத்திரிகை உலகப்பணி), இலங்கை அரசகரும மொழித்திணைக்களத்தின் ஓய்வுபெற்ற தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவரும், கொழும்பு தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவருமான கா.பொ.இரத்தினம் (கல்கியின் சிறுகதைகள்), மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியரான தமிழ்த்தூது தனிநாயக அடிகளார் (கல்கியின் வரலாற்று நாவல்கள்), சிங்கப்பூர் நாட்டு மொழி பண்பாட்டுக் கழகத்தின் தமிழ்ப் பகுதித் தலைவரரான வை.திருநாவுக்கரசு (கல்கியின் சமூக நாவல்கள்), கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளரான ஈ.ச.விசுவநாதன் (கல்கியின் பொன்னியின் செல்வன்)ஆகிய ஐவரும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இவ்வுரையை வழங்கியிருந்தனர். ஈழத்துத் தமிழறிஞரான பண்டிதர் கா.பொ.இரத்தினம், உலகத் தமிழ் மன்றத் தலைவராகப் பணியாற்றிய வேளையில் தொகுத்த நூல் இதுவாகும்.