மூ.சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவில் சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, மே 2004. (யாழ்ப்பாணம்: யோகநாதன் கிராப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி, இணுவில்).
xxv, 428 பக்கம், தகடுகள், புகைப்படம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ.
இணுவில் கிராமத்தின் கோயில்கள், கலைகள், பண்டைய மக்களின் பக்திநெறி, அவர்களை வழிநடாத்திய சித்தர்கள், அருளாளர்கள், கல்விமான்கள் ஆகியோரின் சிறப்பு, அவர்கள் உருவாக்கி வழிநடத்திய சமய சமூக நிறுவனங்கள், பாடசாலைகள், இணுவிலில் வளர்ந்த கலைகள், நாடக, நாட்டிய மரபுகள் என்பனவற்றை விரிவாக உள்ளடக்கிய பிரதேச வரலாற்று நூல் இதுவாகும். ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக 21 அத்தியாயங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், அந்தணப் பெரியார்கள், இணுவில் பெரிய சந்நியாசியார், தவயோகி, இணுவில் சச்சிதானந்த சுவாமிகள், சின்னத்தம்பிப் புலவர், காரைக்கால் சுவாமியார் எனப்படும் அம்பலவாணர் சுவாமியார், அன்னை சாத்திரம்மா, போன்றோர் உள்ளிட்ட பல பெரியார்களுக்கும் தனித்தனி அத்தியாயங்கள் வழங்கி விரிவாக ஆராய்ந்துள்ளார். இணுவில் சைவத் திருநெறிக்கழகம், இளந்தொண்டர் சபை, திருநெறிய தமிழ்மறைக் கழகம், இந்து மகாசபை, இந்து இளைஞர் பேரவை, பரமானந்தக் களம், சிவகாமி அன்னதான சபை, இணுவில் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமம் ஆகிய நிறுவனங்களும் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. இணுவில் கலைமரபும் கல்விமரபும் பேணிய நிறுவனங்களான திண்ணைப்பள்ளிகள், இராமநாதன் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடம், இணுவில் இந்துக்கல்லூரி, மத்திய கல்லூரி, மருதனார் மடம் இறையியல் கல்லூரி ஆகியனவும் சிறப்புற விளக்கப்பட்டுள்ளன. மகாவித்துவான் ந.வீரமணி ஐயர், லயஞான குபேரபூபதி வி.தெட்சணாமூர்த்தி போன்றோர் பற்றிய சிறப்புத் தகவல்களும் தனி இயல்களாகத் தரப்பட்டுள்ளன. இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட மூ.சிவலிங்கம் வாழ்க வளமுடன், இல்லறம் சிறந்திட வாழ்க, இறையருட் செல்வர்கள் போன்ற பல நூல்களை ஏற்கெனவே வழங்கியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 140439).