ரொபர்ட் நொக்ஸ் (மூலம்), திருவேணி சங்கமம் (தமிழாக்கம்), சி.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xliv, 328 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 23×15 சமீ.
An Historical Relation of the Island Ceylon என்ற தலைப்பில் பிரித்தானியரான ரொபர்ட் நொக்ஸ் (Robert Knox) என்பவரால் அவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சமகால கண்டி இராச்சியம் பற்றிய நூலின் தமிழாக்கம் இதுவாகும். கண்டி இராச்சிய மன்னன், அவனது அரசாங்கம், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களது வழமைகள், வழிபாட்டு முறைகள், பழக்கவழக்கங்கள், விவசாய முறை, உற்பத்தியாகும் உணவு தானியங்கள், கைவினைப் பொருட்கள், மந்தைகள், வீட்டு வளர்ப்புப் பறவைகள், வனங்களிலும் வயல்களிலும் நீர்நிலைகளிலும் சஞ்சரிக்கின்ற பறவைகள், காட்டு மிருகங்கள், புல் பூண்டு வகைகள், மரஞ்செடிகள், மருந்து மூலிகைகள், மருத்துவ முறைகள், காய்கனி வர்க்கங்கள், சுவாத்திய நிலைகள், நிலவளம், நீர்வளம் ஆகிய பல்வேறு விடயங்களைத் தரும் நூலாக இது அமைகின்றது. கிழக்கிந்திய வர்த்தக கம்பெனியின் கப்பலொன்றின் அதிபராகவிருந்த தந்தையாருடனும் வேறு சில பிரித்தானிய அலுவலர்களுடனும் வாணிபநோக்கில் இலங்கை வந்தவர் ரொபர்ட் நொக்ஸ். கொட்டியாராத் துறைமுகத்திலே இவர்களது கப்பல் தரையிறங்கியது. இவர்கள் கண்டி அரசனான இரண்டாம் இராஜசிங்கனின் கட்டளைப்படி ஒற்றர்களாகக் கருதிக் கைதுசெய்யப்பட்டார்கள். இருபது ஆண்டுகள் திறந்தவெளிச் சிறைக்கைதியாகவிருந்த பின்னர் ரொபர்ட் நொக்ஸ் நுவரகலாவிய ஊடாகத் தப்பியோடித் தமிழர் வாழும் வன்னிப் பிரதேசத்துக்கு வந்துவிடுகிறார். அங்கு சிலரின் உதவியுடன் ஒல்லாந்தரை அடைந்து அவர்களின் உதவியுடன் நாடு திரும்புகின்றார். அவ்வேளையில் தனது கண்டி இராச்சிய அனுபவங்களை இந்நூலாக ரொபர்ட் நொக்ஸ் எழுதிவைத்திருக்கிறார்.