பி.இரயாகரன். சென்னை 600002: கீழைக்காற்று வெளியீட்டகம், 10 அவுலியா தெரு, எல்லீசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (சென்னை 24: எழில் பிரிண்ட்ஸ், 63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 85.00, அளவு: 21.5×14 சமீ.
பிரான்சில் வசிக்கும் பி.இரயாகரன், ‘தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்கக் கோரிக்ககையல்ல’ என்ற பெயரில் 1998இல் எழுதிய தனது முதலாவது நூலுடன் ஈழத்து சமூக அறிவியல்தளத்தில் பல வெளியீடுகளைத் தொடர்ந்தவர். இந்நூல் உலகமயமாதல் பற்றிய பல அறியப்படாத செய்திகளைத் தெரிவிக்கின்றது. நிதி மூலதனம் சமூக சாரத்தையே உறிஞ்சுகின்றது, ஏகாதிபத்தியத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றுதான் நிதி மூலதனம், கடனும் வட்டியும் இன்றி உலகமயமாதல் ஒரு கணம்கூட உயிர்வாழமுடியாத நிலை, உலகைச் சூறையாடும் நிதி மூலதனம் எப்படி உருவானது, கூலியற்ற அடிமை உழைப்பும் மூலதனத்தை உருவாக்கியதும், அடிமை ஒழிப்பு காலனிய உ ருவாக்கத்தை வேகப்படுத்தியது, ஆப்பிரிக்காவின் இன்றைய இழிநிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல, லத்தீன் அமெரிக்காவின் முதுகில் செதுக்கியுள்ள அடிமைத்தனம், மனித இரத்தத்தையே உறிஞ்சி வெற்றுடலாக்கும் கடன் என்ற பேய், கடனும் வட்டியும் மனிதகுல முன்னேற்றத்துக்காக உதவுகின்றதா? பிராந்திய ரீதியாக கடன் ஏற்படுத்தும் அவலம், ஐ.எம்.எப் போன்ற புல்லுருவி அமைப்புகள், கடனே நாடுகளை மறுகாலனியாக்குகின்றது, எகாதிபத்திய நலன்கள்தான் உதவிகள், தேசங்கள் திவாலாவது அன்றாட நிகழ்ச்சிப் போக்காகியுள்ளது, நிதி மூலதனமே உற்பத்திகளையே உறிஞ்சுகின்றது, தேசிய சொத்துக்களையே அபகரிக்கும் நிதி மூலதனம், ஏகாதிபத்திய நாடுகளின் கடன்கள், மக்களின் சேமிப்புகளை அபகரிப்பதே பங்குச்சந்தை, குமிழிப் பொருளாதாரம் மிதக்கும் அமெரிக்க சூக்குமம் ஆகிய 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.