9633 மண்ணில் வேரோடிய மனசோடு: கவிதைத் தொகுதி.

அப்துல் காதர் அஸீம் (புனைபெயர்: யாழ். அஸீம்). கொழும்பு 10: ஸ_பைதா பதிப்பகம், 228/1, ஜூம்ஆ மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, ஸ்டேஷன் வீதி).

xxvii, 125 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54621-0-5.

கலாபூஷணம் அ.கா.அஸீம், தமிழ் கதைஞர் வட்டத்தின் சிறந்த சிறுகதைக்கான விருதினையும் முன்னர் பெற்றவர். வீச்சும் வீரியமும், சொல்லாட்சியும் மிக்க இவரது கவிதைகளின் மூலம் ஈழத்துக் கவிதை உலகிலும் தற்போது தடம்பதித்துள்ளார். இவரது கவிதைகளில் இதயத்தைத் தொடும் வார்த்தைப் பிரயோகங்கள், சொற்சிக்கனம், சொற்திரட்டு, இறுக்கம் என்பனவற்றின் திருப்திகரமான பிரயோகங்களும் காணப்படுகின்றன. இதயத்தில் என்னைச் சுமந்தவளுக்காக என்ற தலைப்பில் தொடங்கி உரத்துப் பேச ஒரு ஒட்டகம் இல்லையே என்ற இறுதிக் கவிதை வரையிலுமான 23 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அகதி வாழ்வின் அத்தனை துயரங்களையும் சுமைகளையும் இக்கவிதைகள் தருகின்றன. அ.மார்க்ஸ், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கலைவாதி கலீல் ஆகியொரின் முன்னுரைகளுடன் வெளிவந்துள்ள கவிதைத் தொகுதி இது. வடபுல முஸ்லிம்களின் இரு தசாப்தகால வாழ்வியலையும் அவர்களின் உணர்வுகளையும் ஒரு அகதியின் வாக்குமூலமாக இந்நூலில் தனது கவிதைகளினூடாகப் பதிவுசெய்திருக்கிறார். வடபுல முஸ்லிம்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்ட தாக்கத்தின் பதிவுகளாக இக்கவிதைகள் அமைவதுடன், இடம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வியல், நட்புக்கான ஏக்கம் என்பனவும் இக்கவிதைகளில் வீச்சுடன் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆசிரியரான அஸீம் தன் கவிதைகளில் கற்பனைகளையும் வர்ணனைகளையும் அள்ளிவீசாமல் நிஜமான வலிகளையும் உணர்வுகளையும் பதிவுசெய்வதால் கவிதைகள் வலிமைமிக்கதாக அமைந்துள்ளன. 35 வருடங்களாக இலக்கிய உலகில் வலம்வருபவர் இவர். சிறந்த கவிதைத் தொகுதிக்கான 2012ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது, இந்நூலுக்கு 11.9.2013 அன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்