பாலமுனை பாறுக். பாலமுனை 3: பர்ஹாத் வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).
88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-99311-2-6.
1987இல் பதம் என்ற கவிதைநூலின் வாயிலாக இலக்கிய உலகில் அறிமுகமானவர் பாலமுனை பாரூக். தொடர்ந்து சந்தனப்பொய்கை என்ற கவிதைத் தொகுதியின் மூலம் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றைக் கவிதையாக வடித்துப் பிரபல்யமானவர். தனது கொந்தளிப்பு என்ற முதலாவது குறுங்காவியத்தை 2010இல் வழங்கிய இவ்வாசிரியரின் நான்காவது நூலாக வெளிவரும் மற்றுமொரு குறுங்காவியம் இது. இக்காவியத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லிம் குடும்பப்பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப்போராட்டமும், விவாகரத்தும், மறுமணம்முடித்தலும் ஆகிய விடயங்கள் பாடுபொருளாக அமைந்துள்ளன. முஸ்லிம்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவுசெய்யும் வகையில் இக்குறுங்காவியத்தில் முஸ்லிம்களின் திருமணச்சடங்கு முறைமை, மையத்துச் சடங்கு, பிறப்புச் சடங்கு, பூப்படைதற் சடங்கு, பெண்பிள்ளைச் சுண்ணத்துச் சடங்கு ஆகிய விடயங்களை மிகவும் சுவைபடப் பதிவுசெய்திருக்கிறார். பலநூறு வருடங்களாக பேணப்பட்டுவந்த சோனகப் பண்பாட்டின் வாழ்வியலை அதில் பெண் பெற்றிருந்த வகிபாகத்தை அவள் அடைந்த வெற்றி தோல்விகளை இக்குறுங்காவியம் மிகக்கச்சிதமாகப் பதிவாக்கியிருக்கிறது.