குணா கவியழகன். சென்னை 600014: அகல், 348ஏ, டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, மே 2014. (சென்னை: மணிஆப்செட்).
144 பக்கம், விலை: இந்திய ரூபா 135., அளவு: 21.5×14 சமீ.
‘ஏணைப் பிறை’ என்ற தலைப்புடன் இந்நாவல் 2004இல் எழுதப்பட்டு 2006களில் வன்னியில் வெளியிடப்பட்டிருந்தது. ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தராகவிருந்த க.வே.பாலகுமாரனின் விரிவான முன்னுரையுடன் அன்று வெளிவந்திருந்தது. விரிவான வாசகர் பார்வைக்காக மீண்டும் இந்நாவல் பிறிதொரு தலைப்பில் அச்சிடப்பட்டுள்ளது. இக்கதைசொல்லி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர். இறுதிநாட்கள் வரை வன்னியில் வாழ்ந்தவர். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நாட்களில் இராணுவத் தடுப்பு முகாம் என்ற முள்வேலிக்குள் அடைபட்டிருந்தார். பின்னர் விடுதலையாகி ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் அடைக்கலம் பெற்று வாழ்கின்றார். ஈழப்போரிலக்கியத்தின் ஒரு பரிமாணத்தைப் பதிவுசெய்யும் இந்நூல், ஈழத்தின் நஞ்சுண்டகாடு காட்டுப்பகுதியில் பயிற்சிபெறச் செல்லும் இளைஞர் குழுவொன்றின் அனுபவங்கள், மனிதநேய உணர்வுகள் என்பனவற்றின் பின்னணியில் ஒரு நாவலாக மலர்ந்துள்ளது. சுகுமார் என்ற போராளியின் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட அவலங்கள், கரும்புலியாகி தற்கொடைத் தாக்குதலில் தன் உயிரை ஈகம்செய்த அப்போராளியின் குடும்பத்தினர் எதிர்கொண்ட அவல வாழ்வு என்பன இந்நாவலின் இறுதிப் பகுதியை நகர்த்திச் செல்கின்றன.