என்.செல்வராஜா. கனடா: அகிலன் திருச்செல்வம் 25வது ஆண்டு நினைவு வெளியீடு, அகிலன் அசோஷியேற்ஸ், P.O.Box 3, Station-F, ரொறன்ரோ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (கனடா: அகிலன் அசோஷியேற்ஸ்).
96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-0-9685364-4-5.
இந்நூலில் மூன்று கட்டுரைகள் உள்ளன. முதலாவது கட்டுரை ‘ஈழத் தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும்’ என்பதாகும். இது நவம்பர் 2012இல் வெளிவந்த ஞானம் இதழின் போர் இலக்கியச் சிறப்பிதழுக்கென எழுதப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்னதாகவிருந்து, முள்ளிவாய்க்கால் முடிவு வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட போர்க்காலப் பிரசுரங்களின் விரிவானதொரு அறிமுகமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இரண்டாவதாக இடம்பெறும் ‘ஈழமண்ணில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு: நூல்வழிப் பதிவுகள் பற்றியதொரு தேடல்’ என்ற கட்டுரை தமிழர் தகவல் (கனடா) 22ஆவது ஆண்டு மலருக்கென பெப்ரவரி 2013இல் எழுதப்பெற்றது. 1987-1990 காலகட்டத்தில் இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த வேளையில் நடந்தேறிய நிகழ்வுகள் பற்றிய நூல்வழிப் பதிவுகளே இக்கட்டுரையாகும். இத்தொகுப்பிலுள்ள மூன்றாவது கட்டுரை ‘ஈழத்தின் வடபுலப்பெயர்வும் அது தொடர்பான இலக்கியங்களும்’ என்பதாகும். ஈழத்தின் வடபகுதியில் தளம்கொண்டுள்ள பலாலி இராணுவ முகாமிலிருந்து பெருமெடுப்பில் வலிகாமம் பிரதேசத்தை நோக்கிய படைநகர்வொன்றை நடத்தத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு முகம்கொடுக்க இயலாமல் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பகுதியிலிருந்து மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த வீடுவாசல்களையும் தேடிய தேட்டங்களையும் கைவிட்டு பயத்தோடும் பரிதவிப்போடும் குடாநாட்டைவிட்டு, பாரிய இடப்பெயர்வொன்றை (நஒழனரள) மேற்கொண்டார்கள். உலகின் எந்தவொரு இனத்திற்கும் வரலாற்றில் ஏற்பட்டிராததும் பாரிய எடுப்பில் இடம்பெற்றதுமான இந்த அவல நிகழ்வில் ஏறத்தாள ஐந்து இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் மக்கள் கையில் எடுக்கக்கூடிய பொருட்களுடன் குடும்பம் குடும்பமாக ஒரே நாளில் புறப்பட்டு சேரிடம் அறியாது மூன்று நாட்களாக உண்ண உணவின்றி மரநிழல்களில் தங்கிக் கூட ஓய்வெடுக்கும் வாய்ப்பின்றி ஒருவழிப்பயணத்தை மேற்கொண்ட அந்தக் கையறுநிலை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக வெளிவந்த நூலியல் பதிவுகளின் தொகுப்பினையே இக்கட்டுரை தாங்கி வருகின்றது. ஞானம் மாத இதழில் மே 2013 முதல் ஜுலை 2013 வரை மூன்று பாகங்களாக இக்கட்டுரை முதலில் வெளிவந்தது.