சூரன் ஏ.ரவிவர்மா. தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (தெகிவளை: காயத்திரி அச்சகம்).
80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-8741-64-1.
வடமராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்துப் போராடிய சூரன் அவர்களின் முதல் பேரனான ஏகாம்பரம் ரவிவர்மாவின் சிறுகதைத் தொகுதி. 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மக்களின் அகவாழ்வின் நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நுட்பமான முறையில் சொல்லும் கதைகள் இவை. பெரும்பாலானவை இன முரண்பாட்டையும், யுத்த விளைவுகளையும் தொட்டுச்செல்பவை. கிராமியப் பண்பாட்டுக்கோலங்களையும் படம்பிடித்துக்காட்டுகின்றன. தீவிரவாதத்தை அடக்க முற்படுபவர்களினால் அப்பாவிகள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை உணர்வுபூர்வமாகத் துணிவோடு ஆசிரியர் சொல்லியிருக்கிறார். பதினாறு கதைகள் கொண்ட இத்தொகுப்பின் தலைப்புக்கதை வடபகுதியில் வாழும் மக்கள் பற்றியது. வடபகுதி மக்கள் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையையே காலம்காலமாக பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள் என்பதை குறியீட்டுக் கதையாகக் காட்டியுள்ளார். போனால் போகட்டும் என்ற கதையில் வரும் வேலுச்சட்டம்பியார் சைக்கிளையும் இயந்திரத்தையும் தொலைத்துவிட்டு சங்கடப்பட்டுவிட்டு ‘மனிசனே போறான் இடையில் இது என்ன பெரிசா’ என்று மனதை சமாதானப்படுத்துகிறார். மரணங்கள் மலிந்த பூமியின் சாமானியனின் குரலாக இது அமைகின்றது. மகளும் பேரப்பிள்ளையும் வயதான பேத்தியாருக்குப் பணிவிடை செய்வதும் சின்னச்சின்ன ஆசைகளைச் சுமந்து வாழ்வதும் பொன்னுக்கிழவி என்ற கதையினூடாக பதியப்படுகின்றது. மிலேனியம் அப்பா, என்னைத் தெரியுமா, செல்லாக்காசு, கொக்குவெடி ஆகிய கதைகள் நகைச்சுவை உணர்வைத் தூண்டும் வகையில் உள்ளன. மரண பயத்துடன் நாட்களைக்கடத்தும் அப்பாவி மக்களின் உணர்வுகளை தாலி பாக்கியம் கதையில் காட்டுகின்றார். இவரது கதைகள் வாசகரைத் தனது உணர்வோடு ஒன்றிணைத்து கூடவே அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233654).