9719 உம்மத்: நாவல்.

ஸர்மிளா ஸெய்யித். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்).

431 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-21-9.

கிழக்கிலங்கையின் ஏறாவூர் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஸர்மிளா ஸெய்யித். இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல் துறைகளில் பயின்றவர். சமூகச் செயற்பாட்டாளரான இவர் ஊடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர். சிறகு முளைத்த பெண் என்ற கவிதைத் தொகுப்பின்வழியாக 2012இல் முதல் நூலை வெளியிட்ட இவரது இரண்டாவது நூலும் முதலாவது நாவலும் இது. உம்மத் – போருக்குப் பிந்தைய ஈழத்தின் இருண்ட  காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது. தவக்குல், யோகா, தெய்வானை என்ற மூன்று பெண் முனைகளிலிருந்து நாவல் உருவகம் கொள்கின்றது. தன்னார்வத் தொண்டாற்றும் தவக்குல் எதிர்கொள்வது மத அதிகாரத்தின் கோபத்தையும் அச்சுறுத்தல்களையுமே. போராளியான யோகாவை விரட்டுவது குடும்பத்தினரின் உதாசீனமும் புலனாய்வுப் பிரிவினரின் சந்தேகப் பார்வையும், தெய்வானையை அலைக்கழிப்பது முன்னாள் போராளி என்ற அடையாளமும் ஆகும். இந்த மூன்று பெண்களும் அவரவர் துயரத்தை மீறி அடுத்தவருக்கு ஆறுதலாகின்றனர்.  போருக்குப் பிந்தைய காலமும் மனிதர்கள் மீண்டெழுவதற்குப் பாதகமாகவே இருக்கின்றது என்பதை வலியுறுத்திச் சொல்கிறது உம்மத். இஸ்லாமிய அடிப்படைவாதம், தமிழ்த் தேசியவாதம், சிங்களப் பேரினவாதம் என்று எல்லா வாதங்களும் முடக்கியிருக்கும் இலங்கைச் சூழலில் இந்த உண்மையைச் சொல்ல அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவு நாவலாசிரியருக்கு இயல்பாகவே உள்ளது. (உம்மத் என்ற அரபுச்சொல் சமூகம், மனிதக் கூட்டம் என்று பொருள்படும்).

ஏனைய பதிவுகள்

9374 தமிழ் மொழியும் இலக்கணமும்.

பாலசிங்கம் பாலகணேசன். யாழ்ப்பாணம்: பா.பாலகணேசன், தமிழ்த்துறை விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: சத்தியா பிறின்டெர்ஸ், 153/11 நாவலர் வீதி). xii, 132 பக்கம், விலை: