அப்துல் காதர் லெப்பை( மூலம்), அமீர் அலி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 92 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-383-9.
இந்நூல் இரு பகுதிகளைக் கொண்டது. அப்துல் காதர் லெப்பையின் முதலாவது ஆக்கமாகக் கருதப்படும் காணாமற்போன ஒட்டகை என்ற கதையின் முற்பகுதிகள் நூலில் முதல் எட்டு அத்தியாயங்களில்; இடம்பெற்றுள்ளன. கையெழுத்துப்பிரதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில் கிடைத்தவற்றைக்கொண்டு பதிப்பாசிரியரான புலவரின் மகனார் அதனை அச்சுவாகனமேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கதை இயம்பும் கவிதைகள் சில தேடித் தொகுக்கப்பெற்று கதைகூறும் கவிதைகளாக, இரண்டாவது பகுதியில் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டாம் பகுதியில் முதலில் கவிஞரால் மொழிபெயர்க்கப்பெற்ற 13 பாரசீகக் கவிதைகளும் மேலும் நான்கு கவிதைகளுமாக 17 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவை 1960களில் இவரால் எழுதப்பட்டவை. கடந்த அரைநூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியத் தடங்களை அறிந்துகொள்வதற்கும் இஸ்லாமிய இலக்கியத் தனித்துவங்களை கண்டறிவதற்கும் அக்காலத்தைய தமிழ் மொழி ஆசிரியத்துவத்தின் வழியாக எழும் விழுமியங்களைப் பதிவுசெய்வதற்கும் காத்தான்குடிக் கவிஞர் அப்துல் காதர்லெப்பையின் (1913-1984) எழுத்துக்கள் காலச்சுவடுகளாகும். கவிஞரின் மகனான கலாநிதி அமீர் அலி, அவுஸ்திரேலியா மேர்டொக் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமுறை முகாமைத்துவத்துறையில் விசேட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.