9728 நாளை.

காவலூர் எஸ்.ஜெகந்நாதன்;.  சென்னை 600 017: நர்மதா பதிப்பகம், 1, வியாசராவ் தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1982. (சென்னை 600042: நாதன் அன் கோ).

172 பக்கம், விலை: இந்திய ரூபா 10.00, அளவு: 18×12.5 சமீ.

1976இல் இலக்கிய உலகில் தனது சிறுகதைகள் வழியாகவும்,  மித்திரன் வாரமலர் வழியே வெளியான கண்ணீர் கங்கைகள் என்ற தனது நாவலுடனும் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் காவலூர் எஸ்.ஜெகந்நாதன். பின்னர் தினகரனில் இவரது அந்தப்புரங்கள் என்ற தொடர்நாவல் வெளியாகியது. தொடர்ந்து 1981 இல் விடியும் என்ற நாவலை எழுதி  இலக்கிய உலகில் பாராட்டைப் பெற்றிருந்தார். ‘நாளை’ இவரது நான்காவது நாவல். இலங்கை அரசியல் வரலாற்றில் விடுதலைப் போராட்டம் மேலெழத் தொடங்கிய காலகட்டத்தில் இந்நாவல் எழுதப்பட்டது. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் தீவுப்பகுதிக் கிராமமொன்றில் முதிய தலைமுறைக்கும் இளைய (புதிய) தலைமுறைக்கும் இடையே முற்றி வெடிக்கும் முரண்பாடுகளின் கதையே இது. சமூக மாற்றத்திற்காக இணைந்து போராடும்  புதிய தலைமுறை மீது முதிய தலைமுறை எத்தகைய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது என்பதையும், அதற்கெதிராகப் புதிய தலைமுறை சளைக்காது முகம் கொடுத்துப் போராடுகின்றது என்பதையும் காவலூர் ஜெகந்நாதன் இந்நாவலில் காட்ட முனைகின்றார். சமகாலச் சமூகப் பிரச்சினைகள் பலவும் இந்நாவலின் கதாமாந்தரது உரையாடல்கள், நிகழ்ச்சிகளின் வாயிலாக பதிவுசெய்யப்படுகின்றன. இந்நாவலுக்கான முன்னுரையை தமிழகப் படைப்பாளி வல்லிக்கண்ணன் வழங்கியுள்ளார். சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவை வாழ்விடமாகக் கொண்டவர் காவலூர் எஸ்.ஜெகந்நாதன்;. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2023).

ஏனைய பதிவுகள்